சென்னை: கோவையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக முப்பெரும் விழா நடைபெறும்  தேதி மற்றும் இடம் மாற்றம் செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, கோவை கொடிசியா  மைதானத்தில் 15ந்தேதி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

18வது மக்களவைக்கான  தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிகள் அமோக வெற்றி பெற்றன. 39 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, வெற்றி பெற திமுக மற்றும் கூட்டணி  கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் வகையில் கோவையில் முப்பெரும் விழா  நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா – தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா – முதலமைச்சர் அவர்களுக்குப் பாராட்டு விழா  என முப்பெரும் விழா  ஜூன் 14ஆம் தேதி  கோவை, செட்டிபாளையம் ‘எல்என்டி’ புறவழிச்சாலை அருகேயுள்ள பகுதியில் முப்பெரும் விழாநடைபெறும் என அறிவிக்கப்பட்டு, விழாவுக்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், தற்போது திமுக முப்பெரும் விழா கொடிசியா மைதானத்தில் ஜூன் 15ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (ஜூன் 8 ஆம் நாள்) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற “கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்ட”த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா – நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா – சீர்மிகு வெற்றிக்கு கட்சியை வழிநடத்திச் சென்ற தமிழ்நாடு முதல்வர், கட்சித் தலைவருக்குப் பாராட்டு விழா என “முப்பெரும் விழா” ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 14 ஆம் தேதிக்கு பதிலாக “ஜூன்-15ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில்” நடைபெறுகிறது. திமுக தலைவரின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நம் கூட்டணிக் கட்சித்தலைவர்கள், வெற்றிபெற்ற நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். கட்சியின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், வாக்குச் சாவடி முகவர்கள், கட்சி தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.