சென்னை: நெல் ஈரப்பத அளவை அதிகரிக்க மறுத்த மத்தியஅரசை கண்டித்தும், ஈரப்பத அளவை உயர்த்த வலியுறுத்தியும் திமுக கூட்டணி சார்பில் டெல்டா மாவட்டங்களில் ஆர்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல் ஈரப்பத அளவை அதிகரிக்க தமிழ்நாடு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு மறுத்ததாக குற்றஞ்சாட்டி தஞ்சாவூர், திருவாரூரில் திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நவ.23ம் தேதி தஞ்சையிலும் 24ம் தேதி திருவாரூரிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காமல், நிவாரணமும் அளிக்காமல் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ‘மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி’களின் சார்பில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை.
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும்,
தமிழ்நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும்
23.11.2025 அன்று தஞ்சாவூரிலும், 24.11.2025 அன்று திருவாரூரிலும் காலை 10.00 மணியளவில் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல் ஈரப்பத்துக்க காரணம் திமுக அரசு என்றும், . இதற்கு நிரந்தரத் தீர்வு காண கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மாவட்டங்களில், மழையினாலும், பனிப்பொழிவினாலும், அறுவடையான நெல்லில் ஈரப்பதம் அதிகரித்திருக்கிறது. இதனால், வழக்கமான 17% ஈரப்பதம் கொண்ட நெல்லை மட்டும் கொள்முதல் செய்யாமல், 22% ஈரப்பதம் உடைய நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.
கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக பா.ஜ., சார்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, 22% ஈரப்பதம் உடைய நெல்லைக் கொள்முதல் செய்ய அனுமதி பெற்றுத் தந்திருந்தோம். விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, பா.ஜ., தொடர்ந்து துணையிருக்கும். ஆனால், தி.மு.க., அரசு செய்து கொண்டிருப்பதென்ன? தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், விவசாயிகளைக் காக்க வைத்து, அதன் பின்னர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்ற பெயரில் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும், சம்பா பயிர் அறுவடைக் காலத்தில், பருவமழை பெய்வதால், நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் தீர்வு காணக் கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு விவசாய பட்ஜெட்டில், 50% மானியத்தில், நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம் வாங்க 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்த தி.மு.க., அரசு, அதன் பிறகு கடந்த நவம்பர் மாதம் வரை அது குறித்துப் பேசவே இல்லை. நெல் உலர்த்தும் இயந்திரம் வாங்க 50% மானியம் மட்டும் கொடுத்தால், மீதமுள்ள நிதிக்கு, சிறு குறு விவசாயிகள் எங்கே செல்வார்கள்?
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும், தொகுதி மேம்பாட்டு நிதியாக, ஆண்டொன்றுக்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் விவசாயிகளுக்கு இத்தனை ஆண்டுகளாக நெல் உலர்த்தும் இயந்திரம் வாங்கித் தரவில்லை?
நான்கு இரும்புக் கம்பிகளை நட்டு, மேலே ஒரு ஆஸ்பெட்டாஸ் கூரையை வைத்து, நிழற்குடை என்ற பெயரில் 10 லட்சம், 20 லட்சம் என்று கணக்குக் காட்டிக் கொள்ளையடிக்கும் பணத்தில், ஆண்டுக்கு 10 நெல் உலர்த்தும் இயந்திரங்கள் வாங்கி கொடுக்கலாமே!
தொகுதி மேம்பாடு என்பது, தங்கள் பெயரை விளம்பரப்படுத்திக் கொள்வது மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா டெல்டா மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள்?
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் எதிர்கொள்ளும் இந்த ஈரப்பத பிரச்னை, இந்த ஆண்டே இறுதியாக இருக்கட்டும்.
டெல்டா மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், தொகுதி மேம்பாட்டு நிதியில், நெல் உலர்த்தும் இயந்திரங்களை வாங்கி, விவசாயிகள் இலவசப் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை வேண்டும் என்றும், தி.மு.க., அரசு தனது வழக்கமான நாடகத்தை நிறுத்தி விட்டு, இதனை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.