சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 1,05,955 பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை, கருணைத் தொகை வழங்க ரூ.175.51 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான், தமிழக போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 955 ஊழியர்களின் வங்கி கணக்கில் போனஸ், கருணை தொகை செலுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பொதுமக்களின் போக்குவரத்து சேவையை பெருமளவு பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. எட்டு அரசு போக்குவரத்து கழகங்கங்களின் 20,912 பேருந்துகள், 10,125 க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி போக்குவரத்து சேவை வழங்கி வருகிறது.
இந்த பஸ்களில் தினசரி 1.97 கோடி மக்கள் பயணிக்கின்றனர். இதில் 60 சதவீத பயணிகள் கட்டணமில்லா அல்லது சலுகை கட்டணத்தில் பயணிக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பங்களிப்பு இன்றியமையாததாகும்.
இதனால் தமிழ்நாட்டின் பேருந்து வலையமைப்பு ஒரு முக்கியமான சமூக பாதுகாப்பு வலையமைப்பாக விளங்குகிறது. இதனால் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, போக்குவரத்து தொழிலாளர்களின் உழைப்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 1,05,955 பணியாளர்களுக்கு 2024-2025ம் ஆண்டிடிற்கு வழங்கப்படும் மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணை தொகை ரூ.175.51 கோடி அவர்களின் வங்கி கணக்கில் இன்று வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.