கோட்டை முனிஸ்வரர் திருக்கோயில், வெள்ளையக்கவுண்டனூர், திண்டுக்கல்.

தல சிறப்பு :
பக்தர்கள் வேல்காணிக்கை செலுத்துவதும், கோயில் முழுவதும் வேல் ஊன்றி வைக்கப்பட்டிருப்பதும் சிறப்பு.
பொது தகவல் :
ஊரின் எல்லைப் பகுதியில் ஆலமரத்தடியில் வலப்புறத்தில் கோட்டை முத்தாலம்மனும், இடப்புறத்தில் கோட்டை முனீஸ்வரரும் கோயில் கொண்டு அருள்புரிந்து வருகின்றனர் விநாயகப் பெருமானுக்கும் இங்கு சன்னதி உள்ளது.
பிரார்த்தனை :
மஞ்சள் விவசாயத்தில் ஈடுபடுவோர், இங்கு வந்து முத்தாலம்மனிடம் பிரார்த்தித்தால், மஞ்சள் அமோகமாக விளையும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை, தொழிலில் நசிவு, மந்தம் ஆகியவற்றால் அவதிப்படுவோர். இங்கு வந்து வேல் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்டால், விரைவில் பலன் கிடைக்கும்; கல்யாண யோகம் கைகூடும்; வியாபாரத்தில் விருத்தி உண்டாகும் என்று போற்றுகின்றனர் பக்தர்கள் அதேபோல், வாய் பேச முடியாத குழந்தைகள், திக்கிப் பேசும் குழந்தைகள் நன்றாகப் பேச வேண்டும் எனப் பிரார்த்தித்துக்கொண்டு, கோயிலில் மணி காணிக்கை செலுத்தினால் விரைவில் குழந்தைகளின் பேசும் திறன் கூடும் என்பது ஐதீகம் அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகளை அழைத்து வந்து, கோயிலுக்கு எதிரில் படுக்க வைத்து முனீஸ்வரரிடம் ஆடிப்பாடி வேண்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறும். தை மாதத்தில் முனீஸ்வரறாக்கு வேல் காணிக்கை செலுத்தினால், நம் விளைகளை யெல்லாம் தீர்த்தருள்வார் முனீஸ்வர சுவாமி என சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.
நேர்த்திக்கடன் :
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள முனீஸ்வரருக்கு மணி காணிக்கை செலுத்தியும், விளைச்சலின் போது அம்மனுக்கு மஞ்சளைக் காணிக்கையாக்கியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை :
வேடசந்தூர், வெள்ளையக்கவுண்டனூர் முதலான பகுதிகள், விவசாயத்துக்கு உகந்த பூமியாகத் திகழ்கின்றன. எனவே இந்தப் பகுதி மக்கள் பலரும் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் விளைச்சலுக்கும் மகிழ்ச்சிக்கும் முனீஸ்வர சுவாமி ஒருபோதும் குறை வைத்ததில்லை எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். இந்த முறை அமோகமான விளைச்சல் இருக்கணும் பூச்சி பொட்டு தாக்காம பயிர்களை நீதான் காப்பாத்தணும் என்று விதை நெல்லை சன்னதியில் வைத்து வேண்டிக்கொண்டு, பின்பே வயலில் விதைக்கின்றனர். விவசாயிகள். அவடை முடிந்ததும், தங்கள் பூமியில் விளைபொருள்களைக் கொண்டு வந்து, தைத் திருநாளில் சவாமிக்குப் படையலிட்டு நன்றி செலுத்தி வேண்டிச் செல்கின்றனர் தவிர, அப்போது வேல் ஒன்றைக் காணிக்கையாக நட்டு வைத்துச் செல்வதும் வழக்கம் என்கிறார்கள் பக்தர்கள்.
தல வரலாறு :
திண்டுக்கல் அருகே வேடசந்தூர் உள்ளிட்ட சில பகுதிகளை மூக்கலவர் பள்ளியப்ப நாயக்க மன்னன் ஆட்சி செய்து வந்தான் தனது கோட்டையைச் சுற்றிலும் முனீஸ்வரரைக் காவல் தெய்வமாக வைத்து வணங்கி வந்தான். முனீஸ்வரருடன் முத்தாலம்மனையும் விக்கிரகப் பிரதிஷ்டை செய்து வழிபட இருவரும் கோட்டைக்கு அரணெனக் காவல் காத்து வந்தார்கள். பின்னாளில் மன்னன் இறந்து போக, ஆட்சி வேறொருவர் கைக்கு மாறியது ஒரு கட்டத்தில், அந்த ஊரில் இருந்து அடுத்தடுத்த ஊர்களுக்குச் சென்று வசிக்கத் தொடங்கினார்கள் மக்கள், வேடசந்தூரில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது வெள்ளையக் கவுண்டனூர். இங்கே அற்புதமாகக் கோயில்கொண்டு, அருளாட்சி செய்து வருகிறார் கோட்டை முனீஸ்வரர் கோட்டையும் மக்களையும் காக்கும் காவல் தெய்வம் முனீஸ்வரர். எனவே, இவருக்குக் கோட்டை முனீஸ்வரர் என்று திருநாமம் அமைந்தது. அதேபோல், முத்தாலம்மன் என்றே போற்றப்படுகிறார்.
திருவிழா :
தை பிறந்ததும் முதல் மூன்று நாட்கள் விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெறுகிறது, வேல் வைக்கும் வைபவம் முதல் நாள் வீட்டிலும், மறுநாள் கோயிலிலும் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். அப்போது, வீட்டில் வளர்க்கப்படும் மாடு-ஆடு போன்ற கால்நடைகளுக்குப் பொங்கல் வழங்கி வணங்குவார்கள். விவசாயத்துக்குப் பயன்படுத்தும் கலப்பை, அரிவாள் முதலான பொருட்களைச் சன்னதியில் வைத்து வணங்கி, முனிஸ்வரரிடம் பிரார்த்திப்பார்கள்.அன்றைய தினம், வழுக்குமரம் எனப்படும் மரமேறும் நிகழ்ச்சி நடைபெறும் உறியடித்திருவிழாவும் களை கட்டும் மூன்று நாள் திருவிழா முடிந்தாலும்கூட, வருடம் 365 நாளும் முனிஸ்வரருக்கும் முத்தாலம்மனுக்கும் பொங்கல் படையலும், வேல் சார்த்துதலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும் என்கிறார்கள் ஊர்மக்கள் தை மாதத்தை அடுத்து அதற்கு இணையாக ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறும் ஆடி மாதப் பிறப்பில், சகுனம் கேட்கும் நிகழ்ச்சி நடைபெறும்.