திருப்பதி

திருப்பதி கோவிலுக்க்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டி உள்ளது.

நாள் தோறும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். மேலும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

தற்போது தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.,திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை முதல் அதிகரித்த காரணத்தால் இலவச தரிசனத்திற்காக சுமார் 5 கிலோமீட்டர் நீள வரிசையில் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ரூ. 300 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு சுமார் 4 மணி நேரமும், இலவச தரிசனத்திற்கு 30 மணி நேரமும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இலவச தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ள காரணத்தால் திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளும் நிரம்பியது.

அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 5 கிலோமீட்டர் நீள வரிசையில் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். அங்கு வரிசையில் காத்துகொண்டிருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் டீ, காபி, பால், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது.