டுமலை

திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூன்று தெய்வங்களும் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

இந்த கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.

வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவுவதால் அருவிக்கு வரும் நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்புகளைத் தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. எனவே அருவியில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.