ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் இந்து சுற்றுலா பயணிகள்மீத நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தளம் ஒன்றில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், ஒவ்வொருவரையும் நீங்கள் எந்த மதம் என விசாரித்து இந்துக்களை மட்டும் சுட்டுக்கொன்றது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குலுக்கு பிரதமர் மோடி உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட உலக தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது 2019ஆம் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல் என கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக தனது சவுதி சுற்றுப்பயணத்தை இடைநிறுத்திவிட்டு தாயகம் திரும்பினர். பயங்கரவாத தாக்குதல் நடத்த இடத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக சென்று, அங்கு அடுத்தக்கட்ட நடவடிகைக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.
இந்த பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. ஆனால் அதை அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில், காஷ்மீரில் முகாமிட்டுள்ள, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த பரபப்பான சூழலில், இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்காத மாநில முதல்வர் உமர் அப்துல்லா, இன்று மாலை தனது எக்ஸ் தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
“நேற்று (ஏப்ரல் 22ந்தேதி, 2025) பஹல்காமில் நடந்த இழிவான பயங்கரவாதத் தாக்குதலால் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம். அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான இந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் அர்த்தமற்ற மிருகத்தனமான செயலுக்கு எங்கள் சமூகத்தில் இடமில்லை. இதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இழந்த விலைமதிப்பற்ற உயிர்களுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம்.
அன்புக்குரியவர்களின் இழப்பிற்கு எந்த பணமும் ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது, ஆனால் ஆதரவு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக, ஜம்மு-காஷ்மீர் அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் மற்றும் சிறிய காயங்களுக்கு 1 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் வீடுகளுக்குத் திரும்பக் கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன. துயரமடைந்த குடும்பங்களுக்கு எங்கள் இதயங்கள் அஞ்சலி செலுத்துகின்றன. உங்கள் துயரத்தில் நாங்கள் பங்கேற்கிறோம், இந்த இருண்ட நேரத்தில் உங்களுடன் நிற்கிறோம். ஆனால் பயங்கரவாதம் எங்கள் உறுதியை ஒருபோதும் உடைக்காது, மேலும் இந்த காட்டுமிராண்டித்தனத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்”.
இவ்வாறு கூறியுள்ளார்.