ஸ்ரீ வீரநாராயண பெருமாள் கோயில் , காட்டுமன்னார்கோயில், கடலூர்

நாலாயிர திவ்ய பிரபந்தம் இசையோடு பாடப்பெற்ற தலம். மற்றும் நாத முனிகள் மற்றும் ஆளவந்தான் அவதார தலம் .

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் , கோயிலுக்கு முன்பாக கோயிலின் குளம் உள்ளது . இந்த கோயில் பராந்தக சோழனால் கட்டப்பட்டது . 10 ஆம் நூற்றாண்டை சார்ந்த கோயில் . 13 ஆம் நூற்றாண்டில் சதய வர்மன் சுந்தர பாண்டியனால் புதுப்பிக்கப்பட்டது .

இவ்வூரில் அமைந்துள்ள வீராணம் ஏரி மிகவும் புகழ்பெற்றது . கடல் போல் காட்சியளிக்கும் இந்த வீராணம் ஏரியை கட்டியது முதலாம் பராந்தக சோழன் ஆவார் . அமரர் கல்கி எழுதிய புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் புதினத்தில் இந்த வீராணம் ஏரி பற்றி சிறப்பாக சொல்லியிருப்பார்கள் .

ஸ்ரீ நாத முனிகள் அவர்களால் நாலாயிர திவ்ய பிரபந்தம் நமக்கு கிடைக்க உதவிய தலம் . அதற்கு பண் அமைத்து எல்லா இடங்களிலும் பரப்பியது அவர்தான் . இவருடைய பேரனான ஆளவந்தான் பிறந்த தலமும் இதுதான் . மதங்க முனிவரின் தவத்தை ஏற்று பகவான் வீரநாராயனர் என்ற திவ்ய நாமதோடு இங்கு காட்சி தருகிறார் .

கோபுரத்தை தாண்டி நாம் உள்ளே செல்லும் போது கொடிமரத்தை காண்கிறோம் . அதன் பிறகு பலி பீடம் பின்பு பெரிய திருவடியான கருடாழ்வார் இருக்கிறார் .அவரை கடந்து உள்ளே சென்றால் இக்கோயில் உருவாக காரணமான மதங்க முனிவர் தனி சன்னதியில் உள்ளார் . நம்மாழ்வாரை வணங்கியவாறு மதுரகவியாழ்வார் உள்ள சந்நதியை காண்கிறோம் . பின்பு நாத முனிகள் சன்னதி , நரசிம்மர் சன்னதி ,ஸ்ரீராமர் சன்னதி ,ஆண்டாள் நாச்சியார் சன்னதி , ஆஞ்சநேயர் சன்னதி ஆகியவற்றை நாம் தரிசிக்கலாம் .

பகவான் வீரநாராயனர் பெருமாள் மூலஸ்தானத்தில் நின்றபடி அருள் தருகிறார் . ஸ்ரீதேவி , பூதேவி நாச்சியாருடன் காட்சி தருகிறார் . இவ் காட்டுமன்னார்கோயில் கல்வெட்டுகளில் சதுர்வேதிமங்கலம் என்று உள்ளது . திருமண தடை , குழந்தையின்மை ஆகியவற்றிற்கு பரிகார தலம் .செல்லும் வழி

சிதம்பரத்தில் இருந்து சுமார் 25 km தொலைவிலும் சேத்தியாத்தோப்பில் இருந்து சுமார் 17 km தொலைவிலும் உள்ளது .