சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் வழக்கு நாளை முதல் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்தான் மீண்டும் விசாரணை நடத்த உள்ளது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய திமுகஅமைச்சர் பொன்முடி, ஒரு சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை  தண்டனை பெற்று அமைச்சர் பதவியை இழந்தார். ஆனால், உச்சநீதிமன்றம் பொன்முடி மீதான சிறை தண்டனைக்கு விதி விதித்த நிலையில், மீண்டும் தமிழக அமைச்சராக பதவி ஏற்றார்.   இதனால்,  மற்றொரு வழக்கில் கவனமாக இருக்க வேண்டும் என சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த நிலையில், அவரது வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு  நாளை முதல் 4 நாட்கள் விசாரணை நடைபெற உள்ளது.

டந்த  2006 – 11 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த பொன்முடி  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அடுத்து வந்த அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது.   அதாவத,  1996 -2001 திமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து 1996 -2001 வரை வருமானத்திற்கு அதிகமாக 1.36 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடிக்கு எதிராக 2001ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட நிலையில், 2021ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், வழக்கு தூசி தட்டப்பட்டு, விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், பழைய குற்றப்பத்திரிகை தொடர்பான மாறுபட்ட கருத்துக்களை கூறியதால், வழக்கில் இருந்து பொன்முடி  விடுதலை செய்யப்பட்டார். இதுபோன்று பல முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் தங்களது ஊழல் வழக்குகளில் இருந்து அடுத்தடுத்து விடுதலையான விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதில், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்திலும், சில ஆண்டுகளுக்குப் பின்னர் வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டும் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அமைச்சர் பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில், மாவட்ட நீதிமன்றத்தின்   தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு எதுவும் செய்யவில்லை. ஆனால், இவ்வழக்கை தாமாகவே முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி காட்டினார். அத்துடன், வழக்கு விசாரணை மோசமான நடைபெற்றுள்ளது எனவும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். வழக்கு முடிந்துவிட்டது என்று நினைத்த வேளையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்தது பொன்முடிக்கு தரப்புக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் பொன்முடி. ஆனால், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு பாராட்டு தெரிவித்த உச்ச நீதிமன்றம், வழக்கை எதிர்கொள்ள பொன்முடிக்கு அட்வைஸ் செய்தது. எனினும், கடந்த ஜனவரிக்குப் பின்னர் பல முறை பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இறுதி விசாரணை தேதி அறிவிக்கப்பட்டும் பலமுறை தள்ளிப்போனது.

இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மறுஆய்வு வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 18 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார். மே மாதம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இம்மாத தொடக்கத்தில் இருந்து மற்ற மறு ஆய்வு வழக்குகளின் விசாரணையைத் தொடங்கினார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

கடந்த 7ஆம் தேதி முதல் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழக்கில், ஓபிஎஸ், தங்கம் தென்னரசு ஆகியோர் வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை வாதம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில்  நாளை பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் முக்கிய வாதங்கள் முன்வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 4 நாட்கள் வழக்கின் விசாரணை நடைபெறவுள்ளது.

முன்னதாக 2006 – 11 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்,  3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது உத்தரவிட்டார்.  இதனால் அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெற்று மீண்டும் அமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.