திருச்சி: பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்துஅங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி, நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி. சிவா, பெருந்தலைவர் குறித்து கன்னியக்குறைவாக பேசினார். அவர் பேசும்போது, “மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுவதும் காமராஜர் கண்டனம் கூட்டம் நடத்தினார். காமராஜருக்கு ஏசி இல்லை யென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்குகிற அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய கலைஞர் உத்தரவிட்டார். கலைஞரின் பெருந்தன்மையை பார்த்து நெகிழ்ந்து போன காமராஜர், உயிர் போவதற்கு முன்பு, அப்போதைய தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜன நாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்” என தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நடக்காத ஒன்றை நடந்ததாக சிவா திரித்து பேசியதற்கு காங்கிரஸ் கட்சியினர் உள்பட பல கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடார் இன மக்கள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடத்து, தனது பேச்சுக்கு திருச்சி சிவா வருத்தம் தெரிவித்து, அதை பெரிதுபடுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், காமராஜர் குறித்து பேசிய திருச்சி சிவாவின் விளக்கம் ஏற்கும்படியாக இல்லை. மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி காங்கிரசார், அவரது வீட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
வக்கீல் சரவணன் தலைமையில், சிவாஜி பேரவை தலைவர் சிவாஜி சண்முகம், தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகாமையில் உள்ள வ.உ.சி. சிலை முன்பு திரண்டனர். பின்னர் அங்கிருந்து கோஷங்கள் எழுப்பியபடி ராஜா காலனியில் உள்ள திருச்சி சிவா வீட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு சரவணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் உள்ள ஒரு அரங்கில் அடைத்து வைத்தனர்.
இந்தப் போராட்டம் காரணமாக திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சரவணன், பெருந்தலைவர் காமராஜர் மனித கடவுள். அவரைப் பற்றி அவதூறான கருத்தை பரப்பிய திருச்சி சிவா எம்.பி. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். காமராஜர் ஆட்சி போன்று தமிழக மக்கள் ஒரு ஆட்சியை கண்டதில்லை.
மக்களுக்கு வழங்கிய ரேஷன் அரிசியை தானும் சாப்பிட்டு வந்த மகான் காமராஜர். தமிழ்நாடு அரசின் பயனியர் விடுதியில் காமராஜருக்காக ஏ.சி. பொருத்தப்பட்டதாக உண்மைக்கு புறம்பான செய்தியை தெரிவித்துள்ளார். திருச்சி சிவாவின் விளக்கம் ஏற்கும்படியாக இல்லை. அவர் காங்கிரஸ் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…