சென்னை: மத்தியஅரசு  கொண்டு வர முயற்சிக்கும்,  130-வது சட்டத் திருத்தம், வாக்கு திருட்டு குறித்து காங்கிரஸ் மாநில மாநாடு குமரியில் நடத்த  திட்டமிட்டு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வபெருந்தகை  தெரிவித்துள்ளார். இந்த மாநாடு செப்டம்பர் 7ந்தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் நடத்திய வாக்காளர் சீர்திருத்தம் , அதைத்தொடர்ந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சலசலப்புக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில்,.

நீக்கம் மற்றும், மத்தியஅரசு தாக்கல் செய்துள்ள , 130-வது அரசியல் சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளை அஞ்ச வைத்துள்ளது. இந்த சட்டத்தின்படி,  பிரதமர், முதல்வர், அமைச்சர்கள்  யாராவது, தொடர்ந்து  30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களது பதவி பறிக்கப்படும் வகையில் உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  மாநில அரசுகளை முடக்கவே இந்த சட்டம் என்று எதிர்க்கட்சிகள் கூறினாலும்,  ஊழலற்ற சுத்தமான அரசியலை முன்னெடுக்க இந்த சட்டம் அவசியம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை,  மத்திய பாஜக அரசு,  வாக்குரிமை என்ற ஜனநாயக அமைப்பையே சிதைத்து இருக்கிறார்கள். இது பற்றி நாடு முழுவதும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் இந்த பிரச்சினையை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல காங்கிரஸ் சார்பில் மாநில மாநாடு நடத்தப்பபட உள்ளது.

இந்த மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கன்னியாகுமரியில் நடக்கிறது. மத்தியஅரசு மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்பதை மக்கள் மத்தியில் எடுத்து சொல்வதற்காக வாக்குத் திருட்டுகள் விளக்க மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளோம்.

இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு செய்துள்ளோம். மாநாடு நடத்துவதற்கான இடத்தை இன்று பார்வையிட்டு தேர்வு செய்ய இருக்கிறோம்.

அதேபோல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 130-வது சட்டத் திருத்தத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்க்க காரணம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் 10-க்கும் குறைவான மாநிலங்களில் தான் ஆட்சியில் உள்ளன. அந்த மாநிலங்களில் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு 30 நாட்கள் ஜெயிலில் அடைத்து எதிர்கட்சி தலைவர்களை ஒழிக்க பாஜக அரசு முயல்கிறது. எனவே எதிர்க்கிறோம்.

அரசியல் அமைப்பு சட்டப்படி சுப்ரீம் கோர்ட்டு தண்டனையை உறுதி செய்தால் மட்டுமே அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நடைமுறைகள் முடிவுக்கு வர பல ஆண்டுகள் வரை ஆகலாம். எனவே அதை முறியடித்து தண்டனை கிடைத்ததும் பதவி நீக்கம் செய்வதை அமல்படுத்தியது காங்கிரஸ்.

இந்த சட்டம் அமலில் இருக்கும்போது அதில் புதிய திருத்தம் ஏன் செய்ய வேண்டும். இதில் இருந்தே அவர்களின் உள் நோக்கம் புரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.