இந்தியாவும் சீனாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மோடியின் இந்த செயல் டிராகன் முன்பு யானை மண்டியிட்டது போன்றது என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “பயங்கரவாதத்துக்கு எதிராக சீனா “இரட்டை நிலைப்பாடு” மற்றும் “இரட்டைப் பேச்சு” கொண்டுள்ளதாக நீண்டகாலமாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.
ஆனால், இப்போது, இந்தியாவும் சீனாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவை என்று ஜனாதிபதி ஜியிடம் பிரதமர் மோடி கூறியிருப்பது டிராகன் முன் யானை சரணடையும் செயலன்றி வேறு என்ன ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு சீனா உதவுவதாக இந்திய ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்தபோதும் இது குறித்து ஜி ஜின்பிங்கிடம் கேள்வியெழுப்பாமல் பிரதமர் மோடி மௌனமாக இருந்தது தேச விரோதமானது.
56 அங்குல மார்புடைய தலைவர் என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்டவர் இப்போது முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.