டெல்லி

த்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் என்ன சாதித்தது என காங்கிரஸ் கட்சி வினா எழுப்பி உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு அப்போது புழக்கத்தில் இருந்த ஆயிரம் மற்றும் 500 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நடவடிக்கை கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் விதமாக எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஆயினும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

நேற்று இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில்,

”உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் பொருளாதாரத்தை நிலைநிறுத்திய 8 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டில் மீண்டும் கள்ளநோட்டுகள் பெருகிவிட்டதாக தெரிகிறது.2018-19 மற்றும் 2023-24-க்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.500 கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 மடங்காக அதிகரித்துள்ளது. 2020-21-ம் ஆண்டில் இருந்து ரூ.2,000 கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் மொத்த எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று அரசாங்கம் கூறினாலும், இது ஒரு கண்துடைப்பு என்பதே உண்மை. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு அதிக மதிப்புள்ள நோட்டுகளுக்கு கள்ளநோட்டுகள் வேகமாக நகர்ந்துள்ளன. கருப்பு பணமோ, கள்ள நோட்டுகளோ தடுக்கப்படவில்லை என்றால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்ன சாதித்தது? ”

என்று பதிவிட்டுள்ளார்.