ஐதாராபாத்:  உச்சநீதிமன்றத்தை விமர்சித்த தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்வரை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டித்த நிலையில், தனது கருத்துக்கு  நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

பாஜக மற்றும் BRS கட்சி இடையே மறைமுக ஒப்பந்தம் ஏற்பட்டதனாலேயே, மதுபான கொள்கை வழக்கில் BRS கட்சியின் கவிதாவுக்கு ஜாமின் கிடைத்ததாக  தெலங்கானா மாநில காங்கிரஸ் முதல்வர்  முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சனம் செய்திருந்தார். அதாவது, “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடன் பி.ஆர்.எஸ். கட்சி ரகசிய கூட்டணி வைத்துக் கொண்டு செயல்பட்டது. இதனை நாங்கள் பல மேடைகளில் பேசியிருந்தோம். இதற்கு சந்திரசேகர ராவ் உட்பட பலர் மறுப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது கவிதா ஜாமீனில் வெளியே வந்தது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

ஏனெனில், இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மணிஷ் சிசோடியாவிற்கு 15 மாதம் கழித்து தான்ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் கவிதாவிற்கு வெறும் 5 மாதங்களிலேயே நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளதே இதற்கு சான்றாகும்” என ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தார்.

அவரது விமர்சனம் நீதித்துறை மீதான நம்பிக்கையை குலைக்கும் வகையில் இருந்தது. இதுதொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன.

இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திலும் எதிரொலித்தது. இதுகுறித்து கூறிய உச்சநீதமன்றம், தங்களின் தனிப்பட்ட கருத்திற்கு நீதிமன்றத்தை தேவையில்லா மல் இழுக்க வேண்டாம். நாங்கள் எப்படி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற விஷயங்களில் தலையிடாமல் உள்ளோமோ அதேபோன்று நீங்களும் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

இத பொறுப்புள்ள ஒரு முதல்வர் பதவியில் இருப்பவர் பேசும் பேச்சாக இல்லை. நாங்கள் தீர்ப்பு அளிக்கும் போது கட்சிகளை கேட்டுதான் தீர்ப்பளிக்க வேண்டுமா? நாங்கள் எங்கள் மனசாட்சி படியும், சட்டப்படியும்தான் தீர்ப்பளிக்கிறோம்”  இதுபோன்ற கருத்துக்கள் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கடுமையாக சாடியதுடன்,  எங்களை விமர்சிப்பதால் நாங்கள் ஒன்றும் கவலைப்படவில்லை, எங்களின் மனசாட்சிக்கு உட்பட்டு அரசியலமைப்பின் படி கடமையைச் செய்து வருகிறோம் என்று நீதிபதிகள் பிகே.மிஸ்ரா, கே.வி. விசுவநாதன் ஆகியோர் தெரிவித்திருந்தனர். இதையடுத்தே, ரேவந்த் ரெட்டி தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தனது கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார் தெலுங்கானாமாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி,.

இது தொடர்பாக அவர்  தனது சமூக வலைதளமான  எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய நீதித்துறை மீது எனக்கு மிகுந்த மரியாதையும் முழு நம்பிக்கையும் உள்ளது. ஆகஸ்ட் 29, 2024 அன்று சில பத்திரிகைகளில் நான் கூறியதாக வெளியான செய்திகள், நீதிமன்றத்தையும், நீதித்துறையின் ஞானத்தையும் நான் கேள்விக்குள்ளாக்குகிறேன் என்ற எண்ணம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.

நான் நீதித்துறை செயல்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். பத்திரிகைகளில் வெளியான அந்தச் செய்தி களுக்காக நிபந்தனையின்றி எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீதித்துறை மீதும், அதன் சுதந்திரமான செயல்பாடு மீதும் எனக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் நெறிமுறைகள் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட நான், நீதித்துறையை அதன் மிக உயர்ந்த மதிப்பாகக் கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.