சென்னை: அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக – த.வெ.க இடையே மட்டும்தான் போட்டி  என தவெக சிறப்பு பொதுக்குழுவில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய் கூறினார்.

திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் எனவும், 2026இல் மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள் எனவும்  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம்  நவம்பர் 5ந்தேதி அன்று மாமல்லபுரத்தில்  நடைபெற்றது.  இதில் மத்திய மாநில அரசுகள்மீது குற்றச்சாட்டு, முதல்வர் வேட்பாளர் விஜய் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.‘

இந்த  பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய் “நம் குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்லவுட வேதனை, வலியில் இவ்வளவு நாள் இருந்தோம்” என்று உணர்ச்சியுடன் கூறி, பொதுக்குழு கூட்டத்தை தொடங்கினார்.  மேலும் சோக நிகழ்வுக்குகாரணம் திமுக மற்றும், முதல்வர் ஸ்டாலின் என்பதுபோல கடுமையாக விமர்சனம் செய்தார்.  “பெருந்தன்மையை பெயரளவில் மட்டுமே பேசும் முதல்வர், பேரவையில் நமக்கு எதிராக வன்மத்தை கக்கியுள்ளார்” என்று சாடியதுடன்,  “குறுகிய மனம் கொண்ட முதல்வருக்கு சில கேள்விகளை முன்வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

கரூர் சம்பவம் நடந்த உடனே அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டதாகவும், “நமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஒரு சட்டமன்ற உரைக்கு ஒரு நாகரீக பதிலடி கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் பொது வாழ்க்கையில் 50 வருடம் இருந்தாலும், பொது கருத்துகளை அடக்கம் செய்ய முயல்வது திமுக தலைமையின் பழக்கம் என்று விமர்சித்தார்.

தமிழ்நாட்டில் பொது நிகழ்ச்சிகளில் கட்சி தலைவருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, “இந்தியாவில் எந்த தலைவருக்கும் விதிக்கப்படாத நிபந்தனைகளை காவல்துறை என்னுடைய பிரச்சாரத்திற்கு விதித்தது” என்று குற்றம் சாட்டினார்.

“நான் கேட்பதெல்லாம் என்னுடைய கேள்விகள் அல்ல; தமிழக அரசை நோக்கி நீதிமன்றம் எழுப்பியவை” என்று உச்சநீதிமன்றத்தின்  கேள்விகளை மேற்கோள் காட்டி, “நியாயமான விசாரணை நடைபெறுமா என்று உச்சநீதிமன்றத்திற்கே சந்தேகம் வந்தது” என்று கூறினார்.  திமுக அரசின் விசாரணையில் ஆவணங்கள் இல்லை என நீதிமன்றம் குறிப்பிட்டதாகவும் விமர்சித்தார்.

1969-க்குப் பிறகு, கட்சி கைக்கு வந்த காலத்தில் கேள்வி கேட்க ஆளே இல்லாமல் போய்விட்டது. அதற்குப் பிறகு திமுக தலைமை எப்போதும் இப்படித்தான்” என்று ஸ்டாலினை குறிப்பிட்டு, “இப்போது அறிக்கை தயார் செய்து வைத்துங்கள். ‘மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்’ என்று” என்று கூறி, திமுகவின் பொதுமக்கள் தீர்ப்புக்கு பயம் என்று சாட்டினார்.

மேலும், “அரசுக்கு மக்கள் மீது நம்பிக்கை இல்லை. அது மண்ணில் புதைந்துவிட்டது” என்று தெரிவித்ததுடன்,    இறுதியாக 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில் தான் போட்டி திமுக VS தவெக இரண்டுக்கும் இடையே தான் போட்டி எனவும், 2026 தேர்தலில் 100% வெற்றி தவெகவுக்கு என்று உறுதியளித்தார்.