சென்னை: தமிழ்நாட்டில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி ஆட்சி அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் திருச்சி வேலுச்சாமி, அந்த ஆட்சியில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக பதவி வகிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக அரசியல் களம் இப்போதே பரபரப்பு அடைந்துள்ளது. ஆட்சியை தக்க வைத்துள்ள திமுக தலைமை தேர்தல் பணிகளை முன்னெடுத்துள்ள நிலையில், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற அதிமுக, பாஜக கூட்டணியும் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இதற்கிடையில், புதிதாக கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய், தனது கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி என்றும், கூட்டணி கட்சியனிருக்கு ஆட்சியில் பங்கு என கொளுத்தி போட்டுள்ளார். இது அரசியல் களத்தில் கொளுந்துவிட்டு எரிகிறது.
திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள சிறுசிறு கட்சிகளும் தங்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளன. அதன் முன்னோட்டமாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், தங்களுக்கு இந்த முறை அதிக எண்ணிக்கையிலான இடங்கள் ஒதுக்க வேண்டும் என ஒப்பனாக பேசி வருகின்றன.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தவைரான திருச்சி வேலுச்சாமி, தமிழ்நாட்டில் 2026-ல் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக இருப்பார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
திருச்சியில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் அரசியல் அமைப்பை காப்போம் விளக்க பொதுக் கூட்டம் திருச்சியை அடுத்த மணப்பாறையில் இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான, திருச்சி வேலுச்சாமி பேசும்போது, தமிழக முதல்வராக காமராஜர் இருந்தபோது 1954-ல் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை அறநிலையத் துறை அமைச்சராக்கி வரலாறு படைத்தார்.
தமிழகத்தின் முடிசூடாமன்னனாக முதல்வராக இருந்தவர் காமராஜர். இரு இந்தியப் பிரதமர்களை உருவாக்கியவர். ஆனால், அவர் உயிரிழக்கும்போது 100 ரூபாய் கூட அவரிடம் இல்லை. அவரைத்தான் வரலாறு பேசுகிறது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, அசாமில் இருந்து குஜராத்வரை குறுக்கும் நெடுக்குமாக தன்பாதத்தாலேயே அழகு பார்த்த ராகுல்காந்தியை பிரதமராக்கினால் நமது வாழ்க்கை பாதுகாக்கப்படும்.
தமிழகத்தில் காங்கிரஸும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது தான் நமது குறிக்கோள். இதற்கு முன்னர் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சியின் கவுரவத்துக்கு இழுக்கு வராத நிலையில் நமது கூட்டணி இருக்கும். அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக இருப்பார்கள்.
முதலில் தமிழகத்தில் ஆட்சிக்கு வருவோம். பிறகு மத்தியில் ஆட்சிக்கு வருவோம். இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாஜக, தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சிதான் அமையும் என கூறி வருகிறது. இதை நேரிடையாக மறுக்க முடியாத அதிமுக, அதிமுக முழு பலத்துடன் ஆட்சி அமைக்கும் கூறி வருகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகியான திருச்சி வேலுச்சாமியும், அடுத்து கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று கூறியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.