சென்னை: அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் ஜூலை 15ந்தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு, அதை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவித்துள்ளது.

ஜூலை 15ந்தேதி கர்ம வீரர் காமராஜர் பிறந்த நான் அக்நு திருவள்ளூரில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க மறைந்த முன்னாள் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தினார். அதைத்தொடர்ந்து வந்த மாநில அரசுகளும் இந்த திட்டத்தை செம்மைப்படுத்தி வந்தன. மறைந்த எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் மதிய உணவு திட்டம் மேலும் மெருகேற்றப்பட்டு சத்துணவு திட்டமாக மாறியது. இதையடுத்து, கடந்த அதிமுக ஆட்சியின்போது, பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மட்டுமே நடைமுறைக்கு வந்த நிலையில், முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

இதைத்தொடர்ந்து 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, காலை உணவு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரிலான இந்த திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். முதல்கட்டமாக, 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.33 கோடியே 56 லட்சம் செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு (2023-ம் ஆண்டு) தமிழகத்தில் உள்ள  மேலும்,  30 ஆயிரத்து 992 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் 15 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடையும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில்  நடைபெற்று வரும் இந்த திட்டம், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும்  விரிவுபடுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 2 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.600 கோடியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், காலை உணவு திட்ட விரிவாக்கத்தை, மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய காமராஜர் பிறந்த நாளான வரும் 15-ம் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் காலை 8.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டி.பிரபு சங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்டம் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தி.மு.க.வினரும் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.