சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது என அவரை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். அதுபோல முதலமைச்சரின் சகோதரரான மு.க.அழகிரி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த நிலையில், அவர் நலமுடன் உள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட தலை சுற்றலை தொடர்ந்து சென்னை கிரிம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் 3 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய மருத்துவர்கள், அவரை தேனாம்பேட்டை அப்போலோ கேன்சர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் சோதனை மேற்கொண்டனர்
மருத்துவமனையில் ஒய்வுடன் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனையில் இருந்தே அரசு பணிகளையும் கவனித்து வருகிறார். தலைமைச் செயலாளர் உள்பட அரசு அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை சீராக உள்ளது. மேலும் முதல்வரின் உடல்நலம் குறித்து இன்று பிற்பகல் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்படவுள்ளது என்று கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் அவரது சகோதரர், மு.க.முத்து இறப்பின் போது நாள் முழுவதும் நின்று கொண்டே இருந்தார். மேலும் அடுத்த நாள் காலை ஒன்றரை கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொண்டார். இதனால் சோர்வடைந்தார் என்று கூறிய அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதல்வர் விரைவில் வீடு திரும்புவார் என்றார்.
இதற்கிடையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை அறிந்ததும் அவரது சகோதரர் மு.க.அழகிரி மருத்துவமனைக்கு வந்து சகோதரரை சந்தித்து நலம் விசாரித்தார். இன்று 2-வது நாளாக மருத்துவமனைக்கு வந்த மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி கூறுகையில், முதலமைச்சர் நலமுடன் உள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றார்.