சென்னை:  காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூல் வெளியீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல் என்று குறிப்பிட்டுள்ளார்.

 காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல்! வர்க்க வேறுபாடுகளைக் களைந்திட உலகளவில் கம்யூனிஸ்டுகள் போராடுகையில், இந்திய சமூகச் சூழலில் சாதிய வேறுபாட்டை முதலில் ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனையின் தோற்றம்தான் திராவிட இயக்கம்! தந்தை பெரியாரையும் – பேரறிஞர் அண்ணாவையும் சந்தித்திருக்கா விட்டால் நானும் கம்யூனிஸ்ட்டாகியிருப்பேன் என்று முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னது இதனால்தான்!

தமிழ்நாட்டில் இடதுசாரி இயக்கங்கள் வலுவாகக் காலூன்ற – உழைப்பாளர்களின் உரிமைகள் நிலைபெற்றிடச் செந்நீர் சிந்தி உழைத்த – பொதுவுடைமைக் கருத்தியலை விதைத்த 100 போராளிகளை இளம்தலைமுறையினர் அறிந்துகொள்ளக்

“#காலம்தோறும்_கம்யூனிஸ்டுகள்” நூலைப் படைத்திருக்கிறார் கவிஞர் ஜீவபாரதி!

ஆதிக்கமும் – சுரண்டலும் ஒழியப் போராடிய தியாக வரலாற்றை நீங்கள் அனைவரும் உள்வாங்கிட இந்த நூல் துணையாக இருக்கும்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.