திருச்சி: புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் இன்று கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,. புதுக்கோட்டையில்,  ரூ.767 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் , மேலும் மூத்த குடிமக்களுக்கான அன்புசோலை திட்டத்தையும் திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,  அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், நவம்பர்த்  திங்கள் இரண்டு நாள் பயணமாக புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார்கள். அங்கு பல்வேறு முடிவுற்ற பணிகள், புதிய திட்டங்கள், மக்களுக்கு நலத்திடட உதவிகளை வழங்குகிறார்.

திருச்சியில்,  மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, “அன்புச்சோலை – முதியோர் மனமகிழ் வள மையம்” என்ற திட்டத்தை திருச்சி மாநகரில் இன்று  பகல் 12.30 மணியளவில் தொடங்கி வைக்கிறார்கள்.

ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட முதியோர்களுக்காக முதியோர் இல்லங்கள், ஒருங்கிணைந்த வளாக இல்லங்கள், நடமாடும் மருத்துவ அலகுகள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளிட்ட மூத்த குடிமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களைத் திராவிட மாடல் அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.  தற்போது தொடங்கப்படும் “அன்புச்சோலை – முதியோர் மனமகிழ் வள மையங்கள்” திட்டம் மூத்த குடிமக்களின் ஆரோக்கியமான வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் சமூக மையங்களாகச் செயல்படும்.

மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா இரண்டு வீதம்  20 அன்புச்சோலைகள், தொழில் துறை மாவட்டங்களான இராணிப்பேட்டையிலும் கிருஷ்ணகிரியிலும் 2 அன்புச்சோலைகள்,  பெருநகர சென்னை மாநகராட்சியில்  தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் 3  அன்புச்சோலைகள் என மொத்தம் 25 ”அன்புச்சோலை” மையங்கள்  ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு பொழுதுபோக்கு அம்சங்கள், யோகா, நூலகம் மற்றும் தேவையான திறன் மேம்பாடு சேவைகள்   வழங்கப்படுகின்றன.

அன்புச்சோலை திட்டம், முதியோர்கள் மதிக்கும் தமிழ்ப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது. குடும்பங்கள் முதன்மைப் பராமரிப்பாளர்களாகத் தொடர்வதற்கு அரசாங்கம் இத்திட்டத்தின் மூலம் துணைபுரிகிறது.

முதலமைச்சர்  அன்புச்சோலை குறித்து கூறியதாவது,   “முதியோர்கள்தான் சமுதாயத்தின் வழிகாட்டும் சக்தி. இன்றைய தமிழ்நாட்டை உருவாக்க தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள். அவர்கள் கண்ணியத்துடனும், பராமரிப்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதை உறுதி செய்வது எமது கடமை.

அன்புச்சோலை மையம் மூத்த குடிமக்கள் நலன் கருதி பல்வேறு அம்சங்கள் கொண்டு,  தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் பகலில் மட்டும் இயங்கும் மையமாகச் செயல்படும். ஒவ்வொரு மையமும் குறைந்தபட்சம்  50 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் போதிய இடவசதி, போதுமான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கும்.  இந்தப் பகல்நேரப் பராமரிப்பு மையங்களில், முதியவர்கள் தோழமை மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடலாம். அன்புச்சோலை மையங்களுக்கு முதியோர்கள் சென்றுவர போக்குவரத்து வசதியுள்ள இடங்களில்தான்  இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன.

அன்புச்சோலை மையங்களுக்கு வருகை தரும் முதியவர்களுக்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். தகுதி வாய்ந்த பராமரிப்பாளர்கள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்கள் பணியமர்த்தப்பட்டு முதியோரின் விரிவான பராமரிப்பு உறுதி செய்யப்படும்.

அன்புச்சோலை மூலமாக, முதியோர் குடும்பப் பிணைப்பைத் தொடர்ந்தே, பாதுகாப்பான சூழலில், அர்த்தமுள்ளதாக பகல் நேரங்களைக் கழிக்க முடியும். இது, கருணைமிக்க மற்றும் சமூக நீதியினை உள்ளடக்கிய தமிழ்நாட்டிற்கான எமது அரசின் பார்வையைப்  பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

புதுக்கோட்டை  மாவட்டத்தில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தமிழ்நாடு  முதலமைச்சர்  திரு.மு.க.ஸ்டாலின்  அவர்கள்  இரண்டு நாள் பயணமாக புதுக்கோட்டை, திருச்சி ஆகிய  மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார்கள். முதலமைச்சர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 10.11.2025 திங்கள் கிழமை காலை 11 மணியளவில் கீரனூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரித் திடலில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசின்  சார்பில் இதுவரை ரூ.11,481 கோடி மதிப்பீட்டில் 38,35,669 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்கள். ரூ.2,800 கோடியில் 62,088 வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளார்கள்.

முதலமைச்சர் அவர்கள் 10.11.2025 திங்கள் கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் விழாவில் 767 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றுடன் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்கள்.