சென்னை: இரண்டு நாள் பயணமாக இன்று பிற்பகல் ராமநாதபுரம் புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதையடுத்து அங்கு  டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக கள ஆய்வு நடத்தி வருகிறார். அப்போது  முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறார். மேலும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார்.

இந்த நிலையில்,  2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ராமநாதபுரம் செல்கிறார். ராமநாதபுரத்தில்  பேருந்து நிலையம், அறிவுசார் மையம், சமூக நீதி மையம் உள்ளிட்டவற்றை அவர் திறந்து வைக்கிறார் ராமநாதபுரம் அருகே புல்லங்குடி பகுதியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலைய கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார். முதலமைச்சர் பயணத்தின் எதிரொலியாக இன்றும், நாளையும் அங்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.