சென்னை: வடகிழக்கு பருவமழை குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டதை தொடர்ந்து, சென்னையில் மழை வெள்ள பாதிப்பு கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த அதிகாரிகள் கண்காணிப்பார்கள். அவர்களை தொடர்பு கொள்ள, தொலைதொடர்பு வசதியும் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில்  இந்த ஆண்டு, அதிகன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை மையம், சென்னை வானிலை மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்களும் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்.15 அல்லது 16-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால்,  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், சென்னையில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சென்னையில் 180 பகுதிகள் அபாயகரமானவை என கண்டறிந்து முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்,  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில், துணை முதல்வர் உதயநிதி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை டிஜிபி, சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். துறைச் செயலாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விரிவாக ஆய்வு செய்தார்.

மழைநீர் வடிகால் பணிகள், தூர்வாரும் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், ஆவின் பால், குடிதண்ணீர், மின் விநியோகம், பள்ளிகளுக்கு விடுமுறை உள்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து உத்தரவிடப்பட்டது.

இதனிடையே பருவமழைய எதிர்கொள்ள சென்னை மாநகராட்சியில் பணிகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  அதன்படி 5 மண்டலங்களுக்கு தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 3 குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணிகளை ஒருங்கிணைக்க கட்டா ரவிதேஜா, கே.ஜெ.பிரவீன், அமித் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்டலக் கண்காணிப்பு அலுவலர், மண்டல அலுவலர், செயற் பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள் நியமனங்களும் செய்யப்பட்டுள்ளனர்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி, 15 மண்டலங்களுக்கான அதிகாரிகள் சம்மந்தப்பட்ட மண்டலங்களை சேர்ந்தவர்கள், பருவமழையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதால், சம்மந்தப்பட்ட மண்டலத்தைச் சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவியை பெறலாம். அவர்களின் மொபைல் போன் மட்டுமின்றி, தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அதன்படி,

  • நாளை (அக். 15) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
  • நாளை முதல் வரும் 18ம் தேதி வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்
  • தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
  •  வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்பு படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும்.
  • மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுடைய பொறுப்பு மாவட்டங்களுக்கு சென்று, ஆயத்த பணிகளையும், மீட்பு, நிவாரணப் பணிகளையும் மாவட்ட நிருவாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
  • பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ இரயில் மற்றும் பறக்கும் இரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
  • உணவுத் துறை மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • தங்குதடையின்றி ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
  • முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் போதுமான உணவுப் பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்த வேண்டும்.
  • நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.
  • ▪️ ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். மேலும், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • ▪️ மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் போது, பொதுமக்களுக்கு உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

▪️ அனைத்து மாவட்டங்களிலும் சாலைப்பணிகள் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் போதுமான ஒளிரும் பட்டைகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

▪️ விவசாயிகள், மீனவர்கள், நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமானப் பணியை மேற்கொள்பவர்கள் கனமழைக்கான திட்டமிடுதலையும், முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

▪️ தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.

▪️ முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

▪️ கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூடவேண்டாம்.

▪️ அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

▪️ கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும் உள்பட ஏராளமான அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

மேலும்,  பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.