சென்னை: திமுக அரசையும், அரசின் நலத்திட்டங்களையும் பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே. மருத்துவரான இவருக்கு தற்போது 98 வயதாகிறது. இவரது மருத்துவமனை கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. அவரது இல்லம் கீழ்ப்பாக்கம் அடுத்த ஷெனாய் நகரில் உள்ளது. இவர், மத்திய பாஜக அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பாராட்டுவதும், விமர்சிப்பதும் வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனால், அவர் பாஜகவுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ஆகஸ்டு 1ந்தேதி. தேசிய மருத்துவர்கள் தினத்தன்று, இந்தியாவில் போலியோ ஒழிப்புக்காக அவர் ஆற்றிய பணிக்காக ஹாண்டே மருத்துவமனையின் டாக்டர் எச்.வி. ஹாண்டேவுக்கு, தற்போதைய தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணயத்தால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மு.க.ஸ்டாலின் ஹண்டேவை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். சென்னை ஷெனாய் நகர் இல்லத்தில் ஹண்டேவை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் பொன்னாடை போர்த்தினார்.
தமிழ்நாடு அரசின் திட்டங்களை பாராட்டி முதலமைச்சருக்கு எச்.வி.ஹண்டே தொடர்ந்து கடிதம் எழுதி வருவதற்கு நன்றி தெரிவித்தார். இது தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹண்டே உடன் சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நம் #DravidianModel அரசின் திட்டங்கள் குறித்த தமது பார்வைகளை முன்வைத்தும் – தனிப்பட்ட முறையில் என்மீது அன்பு பொழிந்தும் முன்னாள் அமைச்சர் திரு. H.V.ஹண்டே அவர்கள் எழுதும் கடிதங்கள் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பவை! 99 வயதிலும் அயராமல் உழைத்து வரும் அவரை, அவரது மருத்துவமனையில் சந்தித்து மகிழ்ந்தேன்! என கூறியுள்ளார்.