சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமி நாளை கரூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். அப்போது,  2,089 புதிய திட்டங்களுக்கு எடப்பாடி அடிக்கல் நாட்ட இருப்பதாகவும், ரூ.118.53 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், ரூ.35 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்டம் தோறும் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார். இதுவரை 32 மாவட்டங்களில் ஆய்வுகளை முடித்துள்ள நிலையில், நாளை  33–வது மாவட்டமாக கரூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்துகிறார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுசுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தொழில்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம், நகராட்சி நிர்வாகம் மற்றம் குடிநீர் வழங்கல்துறை, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் ஆகிய துறைகளின் சார்பாக ரூ.627 கோடி மதிப்பிலான 2,089 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

மேலும்,  பொதுப்பணித்துறை, போக்கு வரத்துத்துறை, பொதுசுகாதாரம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, கூட்டுறவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.118.53 கோடி மதிப்பிலான 28 முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார்.

பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நல வாரியம், கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட தொழில்மையம், தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

அதனைத் தொடர்ந்து,  கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.

இங்கு ஆய்வு முடித்த பின் 17–ந் தேதி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்துகிறார்.