சென்னை: வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையிலி, அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  கட்டுமான பணிகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம்  இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதே வேளையில் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தை வகைமாற்றம் செய்வது தொடர்பாக இயக்குநர் விதிகளின்படி ஒப்புதல் வழங்கியுள்ளதால் அங்குக் கட்டுமான பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளளனர்.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு ரூ 100 கோடி ஒதுக்கி சர்வதேச மையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன.

வள்ளலார் கோவில் அருகே , சத்தியஞான சபை பெருவெளியில் இந்த மையம் அமைப்பதால், பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் என பக்தர்கள் வள்ளலார் சர்வதேச மையத்தை வேறு இடத்தில் அமைக்க கோரி வந்தனர். ஆனால், தமிழ்நாடு அரசு அதை ஏற்க மறுத்து, கட்டிட பணியை தொடங்கியது.

இதைத்தொடர்ந்து,  அரசின் உத்தரவை எதிர்த்து, பக்தர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையில், ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும், சிலர் அங்கே கட்டமடம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தியும் வழக்குகளை தாக்கல் செய்தனர். இதனால், இந்த விவகாரம் அரசியல் விவகாரமாக மாறியது.

 இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம்,   விசாரித்து  வருகிறது. இந்த நிலையில் வள்ளலார் கோவிலின் பின்புறம் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கவும் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் முதியோர் இல்லம், சித்த மருத்துவமனை உள்ளிட்ட கட்டுமானங்கள் மேற்கொள்ளும் வகையில், விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்து வழங்கிய அனுமதிகளை எதிர்த்து புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த புதிய மனு மீது  சென்னை உயர்நீதிமன்றம்  விசாரணை நடத்தியது. அப்போது சட்டவிதிகளை பின்பற்றாமல் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளதால் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

ஆனால் அனைத்து அனுமதிகளும் விதிமுறைகள்படி பெறப்பட்டுள்ளதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அறநிலையத் துறை தரப்பிலும் வள்ளலார் கோயில் சார்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக நகரமைப்பு சட்ட விதிகளின்படி விவசாய நிலத்தை விவசாயமில்லாத பிற பயன்பாட்டுக்கு வகை மாற்றம் செய்வது தொடர்பாக நகரமைப்ப துறை உதவி இயக்குநர், வேளாண் துறை இணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்று அல்லது அறிக்கைகளை பெற்ற பிறகே நகரமைப்பு துறை இயக்குநர் ஒப்புதல் அளிக்க முடியும். ஆனால் இந்த விதிகளுக்கு முரணாக வள்ளலார் கோவிலின் பின்புறம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வேளாண் துறை உதவி இயக்குநர் அறிக்கை அளிப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பு, வகை மாற்றம் செய்து நகரமைப்பு இயக்குநர் உத்தரவிட்டுள்ளதால், அந்த பகுதியில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டனர்.

அதே நேரம் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தை வகைமாற்றம் செய்வது தொடர்பாக இயக்குநர் விதிகளின்படி ஒப்புதல் வழங்கியுள்ளதால் அங்குக் கட்டுமான பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இதையடுத்து  இந்த வழக்கு விசாரணை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.