சென்னை: சென்னையில் புறம்போக்கு நிலத்தில் உள்ள கட்டிங்களுக்கு சொத்து வரி வசூலிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்ச கவுன்சில் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி ஆணையர் இதுகுறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்ய முடியாத நிலங்களான மேய்ச்சல் நிலங்கள், தரிசு நிலங்கள், கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால், போன்ற நீர்நிலைகள், சாலை, இடுகாடு, போன்ற பொதுப் பயன்பாட்டிற்கான நிலப்பகுதிகள் புறம்போக்கு நிலம் எனக் குறிக்கப்படுகின்றன.

சென்னையில், அரசுக்கு சொந்தமான  புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து  பல ஆயிரம் கட்டிங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த கட்டிடங்களை அகற்றுவதற்கு பதிலாக, அதன்மீது சொத்து வரி வசூலிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. இதன் காரணமாக, அந்த கட்டிடம் சில ஆண்டு களில் கட்டிட உரிமையாளர்களுக்கு சொந்தமாக வாய்ப்பு உள்ளது. ஆனால்,  வருமானத்தை குறிக்கோளாக கொண்டு, விதிகளை மீறி புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு வரி வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்றம்,  அரசு நிலம், புறம்போக்கு நிலங்களில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதன் அடிப்படையில் சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது?  அரசு நிலம் என தெரிந்தும் அதில் தனிநபர் கட்டும் வீடுகளுக்கு எவ்வாறு வரி மதிப்பீடு செய்யப்படுகிறது என  கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மட்டும் சொத்து வரி நிர்ணயித்து  ஆண்டுக்கு இரண்டு முறை வசூலிக்கப்பட்டு வருகிறது.  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சொத்து வரி அதிகரிக்கப்பட்டது.  தற்போது  சென்னையில் மட்டும், சுமார் 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ.1800 கோடி சொத்து வரியாகக் கிடைக்கிறது.

இந்த நிலையில், அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள், நீர்வழித் தடங்களின் கரையோரம், நீர்நிலைகளின் அருகில், முன்பு நீர்நிலையாக இருந்து தற்போது முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.  இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கும் சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதற்கான அனுமதி கோரி  தமிழ்நாடு அரசுக்கு மாநகராட்சி தரப்பில்,  கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அனுமதி கிடைத்ததும், மன்றத்தின் அனுமதி பெற்று செயல்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். முதலில் 20,000 கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீட்டை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் தியாகராயநகர், ஆலந்தூர், மணலி, மாதவரம் ஆகிய பகுதிகளில் புறம்போக்கு நிலத்தில் கட்டிடங்கள் அதிக அளவில் உள்ளன. இதுபோன்ற கட்டிடங்களை சுட்டிக் காட்டி அவற்றை மதிப்பீடு செய்து சொத்து வரி வசூலிக்க முடியும் என்று அரசிடம் விளக்கம் அளித்துள்ளது.

கிராம நத்தம் தவிர தி. நகர் போன்ற பகுதிகளில் சட்டபூர்வ வாரிசுகள் இல்லாமல் உரிமை கோரப்படாத நிலங்களில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் உள்ளன. நகரில் இது போன்ற நிலங்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துக்கள் உள்ளன. அவர்களுக்கு பட்டா இல்லை. ஆனால் பல தலைமுறைகளாக குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதுபோன்ற சொத்துகள மீது அரசு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கிராம நத்தம் உள்ள பல கட்டிடங்களுக்கு சொத்துவரி மதிப்பீடு செய்யவில்லை. இந்து சமய அறநிலையத் துறை நிலங்கள் மற்றும் வக்பு வாரிய நிலங்களில் உள்ள பல கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீடு செய்யவில்லை. பட்டா இல்லாத கட்டிடங்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.