சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையேயான புறநகர் ரயில்கள் மற்றும் மெமு ரயில் சேவைகள் மே 17 முதல் ஜூன் 19 வரை மாற்றியமைக்கப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

புறநகர் பகுதிகளில் இருந்து பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக சென்னை வருபவர்களின், முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில் சேவை. இந்த மின்சார ரயில்கள் மூலம் தினசரி பல லட்சம் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் பயணித்து வருகின்றனர்.
சென்னையில், மின்சார ரயில்கள், சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, கடற்கரை – வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர் – அரக்கோணம், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி – சூலூர்பேட்டை வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவைகளில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது முக்கியமான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரக்கோணம் யார்டில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையேயான புறநகர் ரயில்கள் மற்றும் மெமு ரயில் சேவைகள் மே 17 முதல் ஜூன் 19 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
மே 17 முதல் மே 31 வரை முழு ரத்து
அரக்கோணம் மற்றும் திருத்தணி இடையே அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் இயக்கப்படும் பல புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4:00, 5:00 மற்றும் 6:25 மணிக்கு புறப்படும் ரயில்களும், திருத்தணியிலிருந்து இரவு 9:15 மற்றும் 11:10 மணிக்கு திரும்பும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பகுதி ரத்து
சென்னை மற்றும் அரக்கோணம் இடையே காலை 10:30 முதல் இரவு 10:55 மணி வரை இயக்கப்படும் பல சேவைகள் திருவாலங்காடு – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது, இந்த ரயில்கள் திருவாலங்காடு வரை மட்டுமே இயங்கும். மேலு, அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை மற்றும் மூர் மார்க்கெட் நோக்கி வரும் காலை மற்றும் மாலை நேர ரயில்கள், அரக்கோணம் – திருவாலங்காடு இடையே இயங்காது. இவை திருவாலங்காட்டில் இருந்தே பயணத்தைத் தொடங்கும்.
திருத்தணி சேவைகள்
திருத்தணி நோக்கி அதிகாலை 4:30 மற்றும் மதியம் 12:35 மணிக்குப் புறப்படும் இரண்டு ரயில்கள், திருத்தணி மற்றும் திருவாலங்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜூன் 6 முதல் 19
மூர் மார்க்கெட், திருச்சானூர், அரக்கோணம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களை இணைக்கும் 4 மெமு சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜூன் 19 அன்று அரக்கோணம் வழியாக வேலூர், திருப்பதி மற்றும் மூர் மார்க்கெட் செல்லும் மேலும் 4 மெமு ரயில்கள் ஒரு நாள் மட்டும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
[youtube-feed feed=1]