டில்லி

குடியரசுத் தலைவர் 247 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக  மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

நேற்று மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதில்  அளித்துள்ளார்.

அவர் அந்த பதிலில்,

”கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்து அனுப்பப்பட்ட 247 சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 24 மசோதாக்கள் குஜராத்தில் இருந்தும், 23 மசோதாக்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்தும், 22 மசோதாக்கள் மகாராஷ்டிராவில் இருந்தும் அனுப்பப்பட்டவை.

கடந்த 2014-2022-க்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து 95 மசோதாக்கள் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, பரிசீலனையில் இருக்கின்றன.

இதில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்த 11 மசோதாக்கள், மகாராஷ்டிராவில்  இருந்து வந்த 10, ஆந்திராவில் இருந்து வந்த 9 மசோதாக்களும் அடங்கும்.  இவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சரவை எதுவும் கேள்விகள் எழுப்பினால், அது குறித்துக் குறிப்பிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் இருந்து கருத்து கேட்கப்படக் கால அவகாசம் தேவை என்பதால், மசோதாக்களுக்கான ஒப்புதலுக்குக் குறிப்பிட்ட கால வரையறையை நிர்ணயிக்க முடியாது”

என்று கூறியுள்ளார்.