டெல்லி: 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்,. சுமார். 1.24 மணிநேரம்  பட்ஜெட் உரையை  வாசித்து நிறைவு செய்தார் .

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக அரசு 3வது முறையாக பதவி ஏற்ற நிலையில், மீண்டும் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட நிர்மலா சீத்தாராமன், இன்று 7வது மைறையாக மக்களவையில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக, இன்று காலை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றார்.

காலை 11மணிக்கு அவை தொடங்கிய நிலையில், வழக்கமான நடைமுறைகள் முடிவடைந்ததும், முற்பகல் 11.04 மணிக்கு  நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்,  காகிதமில்லா பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார்.  தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டவர், சுமார் மதியம்  12.28 மணியளவில் நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து, பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட்டு, மக்களவையை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைத்தனர்.

மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், கடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் 7 ஆவது முறையாக இன்று மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆளும் ஆந்திரம், ஒடிஸா மாநிலங்களுக்கு சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் பேரிடர் நிதி, தலைநகர் மேம்பாட்டு நிதி, உள்கட்டமைப்பு நிதி என்று பல்வேறு வகையில் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கம், வெள்ளி, செல்போன், பிளாஸ்டிக் உள்ளிட்டவைக்கான இறக்குமதி குறைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 3 முக்கிய மருந்துகளுக்கான சுங்கவரி ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள், புதிதாக தொழில் பூங்காக்கள் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், டிடிஎஸ் வரியை தாமதமாக தாக்கல் செய்வது கிரிமினல் குற்றம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.