டெல்லி

நேற்று ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் இருந்து உள்நாட்டு நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பல்வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் இ-மெயில்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக நடந்து வருகிறது.. இந்த மிரட்டல்களை தொடர்ந்து சோதனை நடத்தும்போது அவை வெறும் புரளிகளாக இருப்பது அம்பலமாகி வருகிறது.

பல்வேறு விமான நிலையங்களிலும் வெடிகுண்டு புரளிகள் கிளப்பி விடப்படுகின்றன. இது நாடு முழுவதும் விமான பயணிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

நேற்று ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. இதில் விஸ்தாரா, இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களை சேர்ந்த தலா 6 விமானங்கள் இலக்காகி இருந்தன. இந்த விமானங்களில் சோதனை நடத்தப்பட்டதில், அவை அனைத்தும் புரளி என தெரியவந்தது.

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்மோகன் நாயுடு செய்தியாளர்களிடம்,

“கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கிறது. மிரட்டல் அழைப்புகளை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறோம். உளவுத்துறை மற்றும் புலனாய்வுத்துறை மூலம் மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்”

என்று உறுதி அளித்துள்ளார்.