சென்னை: குஜராத் வன்முறை தொடர்பான  பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ள நிலையில், இது மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு காட்டமாக கருத்து தெரிவித்து உள்ளார்.

2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரையும் கொன்ற வழக்கில் இந்த 11 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் பம்பாய் உயர் நீதிமன்றமும் அவர்களின் தண்டனையை உறுதி செய்தது. அவர்கள், கோத்ரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில், குஜராத் அரசால் அமைக்கப்பட்ட குழுவின் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குஜராத் அரசின் தண்டனை குறைப்புக்கொள்கை, 1992ன் படி  தண்டனை கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்தது. அதன் அடிப்படையில்,  பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள்  11 பேரை விடுதலை செய்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொடும் குற்றவாளிகளுக்கு தண்டனை குறைப்பு சரியான என சமூக ஆர்வலர்களும் அரசியல்கட்சியினரும் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், குஜராத் பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிராக பாஜக செயற்குழு உறுப்பினராக நடிகை குஷ்பு கொந்தளித்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் உயிருக்கு பயந்த நிலையில் வாழ்ந்து வரும் பெண்ணுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். அத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் விடுதலை செய்யப்படக்கூடாது, அப்படி விடுவிக்கப்பட்டால், அது மனி குலத்திற்கும், பெண்களுக்கும் இழைக்கப்படும் அவமானம்.

பில்கிஸ்பானு மட்டுமில்லாமல் வேறு எந்த பெண்ணாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவருக்கு அரசியல்  சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு, அனைவரும் ஆதரவாளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளர்.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆட்சியாளர்கள் தங்களது கட்சியினரை விடுதலை செய்துள்ளதற்கு, அதே கட்சியை சேர்ந்த குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.