சென்னை: அடுத்த 10 நாட்கள் எச்சரிக்கையாக இருங்கள் என தமிழக மக்களுக்கு  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னைக்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசி குறித்து சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கில் ஆய்வ செய்த  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

நமது மாநிலத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் தொற்று பரவல் மேலும் அதிகாரிக்காத வகையில், பாதுகாப்பு பணிகள், தடுப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதனால் அடுத்த 10 நாட்கள் மிகவும் கூர்ந்து கவனமாக செயல்பட வேண்டும். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு, இந்த மாத தொகுப்பிற்கு தற்போது வரை 63 லட்சத்து 76 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன.  மத்திய அரசு 5 லட்சத்து 89 ஆயிரம் தடுப்பூசிகளை கூடுதலாக அளித்துள்ளன். மீதமுள்ள 16 லட்சத்து 75 ஆயிரம் தடுப்பூசிகளையும் விரைவில் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது 14 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்த தடுப்பூசிகள் 3 நாட்களுக்கு பயன்படுத்தப்படும். மேலும், எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் நாள்தோறும் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று வருபவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

அடுத்த மாதத்திற்கு மத்திய அரசு 1.04 கோடி தடுப்பூசி வழங்க உள்ளதாக தெரிவித்து உள்ளது. அரசு மேலும், தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அதேபோல் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றையும் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.