சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது  மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் வழியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை   வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வடக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.  இந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேசத்தின் தெற்கே 130 கி.மீ. தொலைவிலும் கொல்கத்தாவின் தென்கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேச கடற்கரையை அடுத்த 24 மணி நேரத்தில் கடக்க வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்கம் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா மற்றும் ஜார்கண்ட் வழியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (ஜூலை 24) காலை 05:30 மணி அளவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் மேற்கு வங்காளம் – வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். மேலும், மகாராஷ்டிரா – கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளிலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக,  தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.