சென்னை:  சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளி, முதியோர்கள் பயன்படுத்தும் வகையில்,  பேட்டரி வாகனங்கள் சேவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த சேவை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த சேவையை நேற்று (ஜுன் 11) துணைமுதல்வர் உதயநிதி தொடங்கி வைத்த நிலையில் நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ்  பெறும் நோக்கில்  தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக,  நாளை முதல் மாற்றுத்திறனாளி, முதியோர் பயன்பாட்டுக்கு பேட்டரி வாகனங்கள் சேவை பயன்பாட்டிற்கு வர உள்ளது.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை, சிறந்த கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கி வருகிறது. இதற்கென சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியம். தமிழகத்தில் உள்ள கோவளம் கடற்கரைக்கு ஏற்கெனவே நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது. இதை யடுத்து, சென்னை மெரினா, திருவான்மியூர் உள்ளிட்ட ஆறு கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்கான கட்டமைப்புகளை அந்தந்த கடற்கரைகளிலும் ஏற்படுத்தும் பணிகள் வேகம் பெற்றுள்ளன.

மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்படும் மற்ற நடவடிக்கைகள் மூலம் இந்தக் கடற்கரைப் பகுதிக்கு அனைத்துலக அங்கீகாரம் கிடைப்பதுடன், சுற்றுப்பயணி களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக சென்னை மெரினா கடற்கரையில் புதிய நடைபாதை, சைக்கிள் வழித்தடங்கள், விளையாட்டுப் பகுதி, கண்காணிப்புக் கோபுரம், 360 டிகிரியில் சுழலும் கண்காணிப்புக் கேமரா, திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும்,  மெரினா கடற்கரைகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் செல்ல சிரமப்பட்டிருந்த நிலையில், மெரினா கடற்கரை பகுதிக்கு எளிதாக செல்லும் வகையில் பேட்டரி வாகன சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (11.06.2025) தொடங்கி வைத்தார். அந்த வகையில், சென்னை மெரினாவில் நாளை முதல் மாற்றுத்திறனாளி, முதியோர் பயன்பாட்டுக்கு பேட்டரி வாகனங்கள் சேவை பயன்பாட்டிற்கு வருகிறது.