தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை இழுத்தனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தது பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இந்த ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 5-ம் திருவிழாவில் குடவருவாயில் தீபாராதனையும், 7-ம் திருவிழாவில் சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பர பவனியும், மாலையில் சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. 8-ம் திருவிழாவில் சுவாமி சண்முகர் காலையில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலாவும், மதியம் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா, திருத் தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு கோவல் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூபம் 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
11ம்நாள் திருவிழாவை முன்னிட்டு நாளை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
இறுதி நாள் திருவிழாவான 12-ம் திருவிழா அன்று இரவு சுவாமி, அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.