பெங்களூரு

பாஜகவை சேர்ந்த முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு பாலியல் வழக்கில் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா, 17 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த மார்ச் 14 ஆம் தேதி இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் 54 வயது தாயார், சதாசிவநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் எடியூரப்பா மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

சிறுமியின் தாய் அளித்த புகாரில்,

“கல்வி தொடர்பாக தனது மகளுக்கு நீதி கிடைக்க எடியூரப்பாவின் உதவியை நாட அவரது வீட்டிற்கு சென்றோம். அப்போது எங்களது குறைகளை சில நிமிடங்கள் கேட்ட எடியூரப்பா, பின்னர் எனது மகளை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததார்”

எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

வழக்கு, பெங்களூரு போலீசாரிடம் இருந்து சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு சி.ஐ.டி. அதிகாரிகள் எடியூரப்பாவின் வாக்குமூலத்தை பதிவுசெய்தனர். நேற்று இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி. நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.

தற்போது பெங்களூரு நீதிமன்றம் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து  உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக உ:ள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, இதுகுறித்து,

“எடியூரப்பாவுக்கு நடைமுறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சி.ஐ.டி. போலீசார் ஜூன் 15ம் தேதிக்கு முன்னதாகவே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விடுவார்கள். அதன்பின் அவர்கள் நடைமுறையை பின்பற்றுவார்கள். எடியூரப்பாவின் வாக்குமூலத்தை பெறுவார்கள்.

அவசியம் என்றால் சி.ஐ.டி. போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார். அது அவசியமா என்று என்னால் சொல்ல முடியாது. சி.ஐ.டி. அதிகாரிகள் சொல்வார்கள். அவர்கள் அவசியம் என்று உணர்ந்தால், அதை செய்வார்கள்”

என்று தெரிவித்துள்ளார்.