சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. இந்த வழக்கில், சென்னை   காவல்துறையிரின் விசாரணை முறையாக இல்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5ஆம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப் பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரை சென்னை காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர். இது விமர்சனங்களை ஏற்படுத்தியது. குற்றவாளியை முழுமையாக விசாரிப்பதற்கு ஏன் என்கவுண்டர் செய்யப்பட்டனர் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை  செம்பியம் காவல் துறையினர்  நியாயமாக விசாரிக்கவில்லை  என கூறி, விசாரணையை  சிபிஐக்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொது செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரரும் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், காவல்துறை நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டதாகவும், ஆம்ஸ்ட்ராங்’கின் மனைவியே காவல்துறையின் விசாரணை திருப்தி அளிப்பதாக தெரிவித்ததாக அதில் கூறப்பட்டிருந்தது. மேலும், இது அரசியல் கொலை இல்லை என்றும் இந்த வழக்கில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைது செய்யப்பட்டவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறை அவசர கதியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும்,  ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியிடம் மேற்கொண்ட சாட்சி விசாரணையின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் விசாரனை மேற்கொள்ள காவல்துறை தவறிவிட்டதாகவும் வாதிட்டார்.

பின்னர், கொலையை நேரில் பார்த்த சாட்சியான ஆம்ஸ்ட்ராங்’கின் சகோதரர் வீரமணி முன்னிலையில் கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அணிவகுப்பு ஏன் நடத்தவில்லை என காவல்துறை தரப்புக்கு கடும் அதிருப்தியை தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.