மும்பை

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவுக்கு இதய நோய்க்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் இதய நோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதயத்தில் வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அதே மருத்துவமனையில் தொடர்ந்து வழக்கமான பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். அவருடைய சமீபத்திய பரிசோதனையில் இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 76 வயதான லாலு பிரசாத் யாதவுக்கு இதயத்தில் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

லாலுவுக்கு இந்த சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகவும், அவர் இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.