சென்னை: நான் சரித்திர பதிவேட்டில் இருந்தேனா? அதற்கான ஆதாரத்தை காட்ட முடியுமா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு சவால் விட்டுள்ளார்.
பாஜக சார்பில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக திருச்சியில் சமக்கல்வி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று (மார்ச் 23) பொதுக்கூட்டம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையை பற்றி பேசிக்கொண்டிருக் கிறார்கள்.
சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் தற்போதைய அமைச்சர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். “பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் மனதில் வைத்து அண்ணாமலை இதை சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.
படிக்காதவர்கள் கல்வியை பற்றி எப்படி பேசலாம் என்று கேட்கிறார். அவரது பேச்சு முன்னாள் முதல்வர் காமராஜரை கலங்கப்படுத்துவது போல தான் உள்ளது. படிப்பிற்கும், சேவைக்கும் சம்பந்தமில்லை.
மனிதாபிமானம் உடையவர்கள் எந்த உயர் பதவிக்கு வந்தாலும் மக்கள் சேவையை தலையாய கடைமையாக ஏற்று செயல்படுவார்கள் என்பது அண்ணாமலை போன்றவர்களுக்கு தெரியாது.
என்னை சரித்திர பதிவேடு குற்றவாளி என்று சொல்லியிருக்கிறார். அதற்கான ஆதாரத்தை காட்டட்டும். ஆதாரம் இல்லாமல் அண்ணாமலை இப்படி பேசக்கூடாது” என்று தெரிவித்தார்.