சென்னை: தேர்தல் பரப்புரை கூட்டங்கள், ரோடு ஷோ நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.
சென்னை தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது. மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த செப்.27-ம் தேதி அன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காரணம், அவரது பிரசாரம் செய்யும் நாளுக்கு முந்தைய நாள் அனுமதி கொடுத்ததுதான் காரணம் என தவெக திமுக அரசுமீது குற்றம் சாட்டியது. இதையடுத்து, பிரசார பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்த விதிமுறைகளை வகுக்க கோரி மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்வுகள், பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாகளில் வகுத்து சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் கடந்த 27ம் தேதி உத்தரவிட்டது.
இதையடுமுத்து, இன்று தலைமைச்செயலகத்தில், மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்துக் கட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தால், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
அதன்படி, காங்கிரஸ், பாஜக, சிபிஎம், ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ், அங்கிகரீக்கப்பட்ட மாநில கட்சிளான, திமுக, அதிமுக, தேமுதிக, சிபிஐ, விசிக, நாம் தமிழர் மற்றும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட பாமக, மதிமுக, தவாக, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, புரட்சி பாரதம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு கட்சிகள் தெரிவிக்கும் கருத்துகள், ஆலோசனைகளின் படி வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.