இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் நாட்டில் ஆசிப் அலி சர்தாரி புதிய குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த மாதம் 8 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இங்குள்ள 265 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்து 3 நாட்களுக்குப் பிறகு முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின. இங்கு ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவை என்கிற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
எனவே பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைக்க முடிவு செய்தன. அந்த கட்சிகளின் சார்பில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஆசிப் அலி சர்தாரி அறிவிக்கப்பட்டார்.
இம்ரான்கான், பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சியின் தலைவர் முகமது கான் அசாக்சாய்-ஐ அவரது கட்சி சார்பில் ஆசிப் அலி சர்தாரிக்கு எதிராக குடியரச்ஷ்ட் தலைவர் வேட்பாளராக அறிவித்தார். நேற்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆசிப் அலி சர்தாரிக்கு 255 வாக்குகளும் முகமது கான் அசாக்சாய்க்கு 119 வாக்குகளும் கிடைத்தன.
அதிக வாக்குகளைப் பெற்ற ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தானின் 14-வது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 68 வயதாகும் ஆசிப் அலி சர்தாரி, 2-வது முறையாகக் குடியரசுத் தலைவர் பதவியேற்க உள்ளார். நாளை அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.