சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ந்தேதி நடைபெற்ற  ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்ற கலவரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ராயப்பேட்டை  காவல்துறையினல், இரு தரப்பை சேர்ந்தவர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆதர வாளர்கள் 30-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

அதிமுகவில் இபிஎஸ் ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலுக்கு இடையில், நீதிமன்ற அனுமதியிடன் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில்ஜூலை  11 ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.  இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். இதனால், அங்கு கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவங்களால் காவல்துறையினர் உட்பட 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக  ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது ராயப்பேட்டை காவல் துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும், கலவரத்தில் ஈடுபட்டதாக வீடியோ ஆதரங்களை வைத்து ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் 14பேரை மட்டும், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கலவரச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் 30-க்கும் மேற்பட்டோருக்கு ராயப்பேட்டை காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். கலவரத்தன்று எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை வைத்து தஞ்சை, ஒரத்தநாடு மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க-வினருக்கு நேரில் சென்று காவல் துறையினர் சம்மனை வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் நாளை காலை 11 மணிக்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் 15-க்கும் மேற்பட்டோருக்கும், நாளை மறுநாள் காலை 11 மணிக்கு ஈ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.