சென்னை: சென்னை சாலைகளில் விதிமீறல் வாகனங்களை கண்காணித்து அபராதம் வசூலிக்கும் வகையில் 200 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறிது என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
சென்னையின் பல இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் கடுமையான வாகன நெரிசல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகம் செல்ல முடியாத நிலை உள்ளது. இதை தடுப்பதில் ஆர்வம் காட்டாத போக்குவரத்து காவல்துறை விதிமீறல்களை காரணம் காட்டி, வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பதிலேயே தீவிரம் காட்டி வருவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில்,. முக்கிய சாலைகளில் விதிமீறல் வாகனங்களை படம் பிடித்து அபராதம் விதிக்கும் வகையில், சென்னை சாலைகளில் 200 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை முடிவு செய்துள்ளது.
சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் மெட்ரோ, கால்வாய் பணிகள் போன்றவற்றால், சென்னையின் பல பகுதிகளில் வாகன நெரிசல்கள் காணப்படுகிறது. இதனால் சில இடங்களில் விபத்துக்களும் தகராறுகளும் உருவாகின்றன. இதை தடுக்கவும், விரைவான போக்குவரத்தை உறுதி செய்யவும் போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக விதி மீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. முதலில் சாலை சந்திப்புகளில் நின்றவாறு அபராதம் விதித்து வந்த போக்கு வரத்து போலீஸார் தற்போது ஆங்காங்கே நவீன கேமராக்களை நிறுவி அதில் பதிவாகும் காட்சிகள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு அபராதம் விதிக்கின்றனர். அதுமட்டும் அல்லாமல் தானியங்கி கேமராக்களும், விதி மீறல் வாகன ஓட்டிகளை அடையாளம் கண்டு அதுவாகவே அபராதம் விதித்து விடுகிறது. வாகன ஓட்டிகளின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் விதி மீறல் தொடர்பான புகைப்படங்களும் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக மேலும் 200 இடங்களில் நவீன ஏஐ காமிராக்களை நிறுவ சென்னை போக்குவரத்து போலீஸார் முடிவு செய்துள்ளனர். அதன்படி, முதல் கட்டமாக சென்னையில் இவிஆர் சாலை, அண்ணாசாலை, மின்ட் உள்பட பல்வேறு பகுதிகளில் 200 கேமராக்களில் ஏஐ தொழில் நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக சென்னையில் மேலும் 200 கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
ஏ.ஐ தொழில் நுட்பம் மூலம் வாகன ஓட்டிகள் விதிமீறனில், அவை துல்லியமாக தெரியம் என்றும், இதனால், விதி மீறலில் இருந்து வாகன ஓட்டிகள் தப்பிக்கவே முடியாது என்று தெரிவித்துள்ள போக்குவரத்து காவல்துறையினர், விதி மீறல்களில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படுவது உறுதி என்ற எண்ணம் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும். வாகன ஓட்டிகளும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து சாலை விதிகளை மீறாமல் நடந்து கொள்வார்கள். இதன் மூலம் விபத்துகளும், விபத்து உயிரிழப்புகளும் வெகுவாக குறையும் என்று கூறி வருகின்றனர்.
ஆனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் வசூலிப்பதில் மட்டுமே குறியாக இருப்பதாகவும், போக்குவரத்து நெரிசலை கண்டுகொள்வது இல்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.