சென்னை: உடல் நலக்குறைவால் காலமான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அவரது மருமகன் இறுதிச்சடங்குகளை செய்தார்.
நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர், உடல் நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

பிரபல திரைப்பட நடிகர் ‘ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு (செப்டம்பர் 18) காலமானார். அவருக்கு வயது 46. அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அங்கு ரோபோ சங்கரின் உடலுக்குத் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தினர். கமல்ஹாசன், ஜி.கே.வாசன், சீமான், சத்யராஜ், உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், பாக்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர், மோகன் ஜி உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கமல், விஜய், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் ‘ரோபோ’ சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ரோபோ சங்கரின் உடல் இன்று மாலை வளசரவாக்கத்தில் உள்ள அவரின் வீட்டிலிருந்து ஊர்வலமாக பிருந்தாவன் நகரில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது ரோபோ சங்கரின் உடலுக்குக் குடும்பத்தினர் நடனமாடி இறுதி அஞ்சலி செலுத்தினர்.
வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் உள்ள மின் மயானத்தில் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. ரோபோ சங்கருக்கு அவரின் மகளும், மருமகனும் இறுதி சடங்குகளை செய்தனர். ரோபோ சங்கரின் இறுதி சடங்கின்போது ஏராளமான திரைக் கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் கலந்துகொண்டனர்.