சென்னை: என “நேர்மைக்கு கிடைத்த பரிசு” என, அரசு மற்றும் காவல்துறையை விமர்சித்த டி.எஸ்.பி சுந்தரேசன் தனது ஸ்பெண்ட் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.
கார் மறுக்கப்பட்டதாக அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது பகிரங்கமாக புகார் அளித்த மயிலாடுதுறை டி.எஸ்.பி சுந்தரேசனை காவல்துறை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான உத்தரவை தற்போது மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

போலி மதுபான பார்களை சீல் வைத்ததால், ஆட்சியாளர்கள் ஆதரவுடன் காவல்துறை உயர்அதிகாரிகள் தன்னை டார்ச்சர் செய்கிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டிய டிஎஸ்பி சுந்தரேசன், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேலன் உள்ளிட்டோர் மீதும் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். டி.எஸ்.பி., சுந்தரேசனின் இந்த பகிரங்க குற்றச்சாட்டு காவல்துறை மட்டுமின்றி தமிழக மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, போதை பொருள் நடமாட்டம், பாலியல் வன்கொடுமை போன்ற சட்டவிரோத நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், டிஎஸ்பியின் குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்களும் திமுக அரசை கடுமையாக சாடியதுடன், சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்டு செய்து காவல்துறை தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
டிஎஸ்பி சுந்தரேசன், கடந்த 1996ல் காவல் துறையில் எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தவர் சுந்தரேசன். இவர், உளவுத்துறை, சட்டம் – ஒழுங்கு, குற்றப்பிரிவு என, பல பிரிவுகளில் பணிபுரிந்துள்ளார். ஐந்து ஆண்டுகளாக சென்னையில் உள்ள மாநில மனித உரிமை கமிஷன் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த ஆண்டு (2024), காஞ்சிபுரத்தில் நிலம் விற்கும் விவகாரத்தில், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்துாரி, 63, கொல்லப்பட்டார். இது தொடர்பாக, அதே மாவட்டத்தை சேர்ந்த, ம.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலர் வளையாபதி, 65, அ.தி.மு.க., பிரமுகர் பிரபு, 52, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை போலீசார், காஞ்சிபுரம் நத்தப்பேட்டையில் உள்ள பயன்பாடு இல்லாத காவலர் குடியிருப்புக்கு அழைத்து சென்று, சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது.
இது பற்றி, சுந்தரேசன் விசாரித்து, போலீசார் சித்ரவதை செய்து இருப்பதை உறுதி செய்து, மனித உரிமை கமிஷனுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கை, டி.ஜி.பி., மற்றும் அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. போலீசாருக்கு எதிராக அறிக்கை சமர்ப்பித்ததால், 2024 அக்டோபரில் சுந்தரேசன் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அப்போதே பிரச்னை எழுந்தது.
மனித உரிமை கமிஷன் கட்டுப்பாட்டில் இருந்த சுந்தரேசன், ஒரு மாதத்திற்கு பின், மயிலாடுதுறைக்கு சென்று பணியில் சேர்ந்தார். சில தினங்களுக்கு முன், அவருக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட பொலிரோ வாகனம், மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின் உத்தரவின்படி பறிக்கப்பட்டு உள்ளது. வாகன பறிப்பு செயலில், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலசந்தர் அநாகரிகமாக நடந்து கொண்டார்.
இச்சம்பவத்தின் பின்னணியில், மாநில சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேலன் உள்ளிட்டோர் உள்ளனர் என்றும், மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் சுந்தரேசன் சுமத்தினார். இதற்கு எஸ்.பி., ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய மண்டல ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார், தஞ்சாவூர் டி.ஐ.ஜி., ஜியாவுல் ஹக் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். சீருடை பணியாளர் விதிகளை மீறி, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, சுந்தரேசனை ‘சஸ்பெண்ட்’ செய்யவும் முடிவு செய்து காவல்துறை தலைமையிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, அவரை சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தனக்கு கிடைத்த பரிசு, தனது நேர்மைக்கு கிடைத்த பரிசு என டிஎஸ்பி சுந்தரேசன் கூறி உள்ளார். இதற்கிடையில், சுந்தரேசனுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர். மேலும், சுந்தரேசனுக்கு காவல்துறையினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.