சென்னை:
தமிழகத்தில் நாளை முதல் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், கொரோனா தீவிரமாகி உள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நாடு முழுவதும் 4-வது கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து 5வது கட்ட ஊரடங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் ஜூன்க 30ந்தேதி நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. மேலும் 8-ந்தேதியில் இருந்து வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், மால்களை திறக்க அனுமதி அளித்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடைகள் அப்படியே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1 முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயங்கும் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பொது போக்குவரத்தில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை, ஆனால், ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை , ஒரே மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்காக பொது போக்குவரத்து அனுமதிக்கு 8 மண்டலங்களாக பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும், ஒரு பேருந்தில் 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
Patrikai.com official YouTube Channel