பாரிஸ்

ந்திய அரசு தன்னை எதிர்ப்போரை தீவிரவாதி என அறிவித்து கொடுமை செய்வதாக  ஐரோப்பிய நாடாளுமன்றம் குற்றம் சாட்டி உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த பீமா கொரேகான் கலவரத்தில் தொடர்புள்ளதாக என்.ஐ.ஏ வால் குற்றம் சாட்டப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான கௌதம் நவல்கா, ஆனந்த் டெல்டும்ப்டே ஆகியோர் ஏப்ரல் 14அன்று என்.ஐ. ஏ. அலுவலகத்தில் ஆஜராகினர்.

இவர்களைக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் அளித்திருந்த அவகாசம் நீட்டிக்கப்படாத நிலையில் இவர்கள் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராகிய போது கைது செய்யப்பட்டி டில்லியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.   இது குறித்த வழக்கில் டில்லி உயர்நீதிமன்றம் என் ஐ ஏ வுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஏற்கனவே குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது .   அவ்வகையில் இந்தியாவில் அரசை எதிர்ப்போரை அமைதிப்படுத்துவதற்காகத் தீவிரவாதி என சித்தரிப்பதாக ஐரோப்பிய நாடாளுமன்ற மனித உரிமைக் குழு குற்றம் சாட்டி உள்ளது.    இதையொட்டி அந்த குழுவின் தலைவர் மரியா அரேனா இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் மரியா அரேனா,
“அன்புள்ள அமைச்சர் அவர்களுக்கு,

உலகெங்கிலும் உள்ள மனித உரிமை மேம்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து, அடிப்படை உரிமைகளை மதிக்க ஆதரவாக பகிரங்கமாக வாதிடும் ஒரு நாடாளுமன்ற அமைப்பான ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகள் துணைக்குழுவின் (டி.ஆர்.ஓ.ஐ) தலைவராக நான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

நாங்கள் இந்தியாவில் மனித உரிமைப் ஆர்வலர்களின் பாதுகாப்பை கண்காணித்து வருகிறோம், ஆனந்த் டெல்டும்ப்டே மற்றும் கவுதம் நவ்லகா ஆகியோரை தேசிய புலனாய்வு அமைப்பு சமீபத்தில் கைது செய்தது குறித்து எங்கள் கவலைகளை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

மனித உரிமை ஆர்வலர்கள் மிரட்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல், மனித உரிமை ஆதரவு நடவடிக்கைகளை நடத்த முடியாத நிலை உள்ளது, குறிப்பாக இந்தியாவின் ஏழ்மையான மற்றும் மிகவும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவாக உள்ளோர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள், மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது கவலைக்குரியது. UAPA சட்டம் அவர்கள் வாயை அடைக்கப் பயன்படுத்தப்படுகிறது.

இது சர்வதேச மனித உரிமைகளை மீறுவதைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள், கொள்கைகள் மற்றும் அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிரான பல்வேறு வகையான நியாயமான அமைதியான போராட்டங்கள் இந்த சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கைகளாகச் சித்தரிக்கப்படுவதை ஐரோப்பிய பாராளுமன்றம் கவனித்துள்ளது,

மனித உரிமை ஆர்வலர்களான சஃபுரா சர்கர், குல்பிஷா பாத்திமா, காலித் சைஃபி, மீரன் ஹைதர், ஷிஃபா-உர்-ரெஹ்மான், டாக்டர் கபீல் கான் ஆகிர் மீதான நடவடிக்கைகள் மற்றும்; அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஆசிப் இக்பால் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சட்டம் அரசு நிறுவனங்களுக்கு அவை விரும்பும் எந்த அதிகாரங்களையும் வழங்கக்கூடும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் உறுப்பினர் என்பதற்குத் தெளிவான வரையறை இல்லாததால் இந்த சட்டத்தை அரசாங்கத்தின் பரந்த விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்த முடிகிறது. . இத்தகைய செயல்முறை நீதித்துறை கண்காணிப்பு மற்றும் நாட்டின் பொது உரிமைகள் பாதுகாப்பை மிகவும் பலவீனம் ஆக்கும்.

இதனால், மனித உரிமைகள் பாதுகாவலர்களின் பணிகளை அதிகப்படியான தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் தடைசெய்வதையும், அவர்களைக் குற்றவாளியாக்குவதைத் தடுத்து நிறுத்தவும்,   அவர்களின் கருத்துச் சுதந்திரங்களை மதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

ஐக்கிய நாடுகள் சபை இந்த கொரோனா காலத்தில் தேவையற்ற கைதுகளை தவிர்க்க வேண்டும் எனவும் ஏற்கனவே சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.  இது குறித்து  மனித உரிமைகள் தொடர்பான துணைக்குழு 2020 மே 11 அன்று கூட்டத்தில் பேசப்பட்டது.  

மனித உரிமைகளைப் பாகுபாடின்றி பாதுகாப்பது நமது முக்கியமான கடமை மற்றும் பொறுப்பு என்று நாங்கள் நம்புவதால் இந்த நடவடிக்கைகளில் இந்தியா சேர்ந்து ஐ நா வழிகாட்டுதல்களை முழுமையாகச் செயல்படுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்

இந்திய உச்ச நீதிமன்றம் இந்த கடினமான நேரத்தில் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இப்போது மனித உரிமைகளுக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்த்து தொற்றுநோய்க்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் ஈடுபடுத்துவது அவசியமான தேவையாகும்.

எனவே இந்த துணைக்குழு இந்தியாவுடன் ஒரு திறந்த உரையாடலை நடத்த விரும்புகிறது.   மேலும் இந்தியா தனது ஒத்துழைப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டின் மூலம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் மேலும் முன்னேறும் என எதிர்பார்க்கிறது.

தங்கள் உண்மையுள்ள,

மரியா அரினா

என எழுதி உள்ளார்.