
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு சென்றுவிட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கி உள்ளது.
இங்கிலாந்தில் உள்ள அவரை அமலாக்கத்துறையின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. அவரை கைது செய்ய மும்பை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இங்கிலாந்தில் தங்கியுள்ள விஜய் மல்லையாமீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்தியாவில் விசாரணை நடந்து வருகிறது. எனவே அவரை இங்கிலாந்தில் இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று கோரி டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்திற்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், இந்திய அரசு என்மீது மிகுந்த ஆத்திரத்துடன் இருப்பதால் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன் என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
மத்திய லண்டனில் உள்ள மேஃபேர் பகுதியில் விஜய் மல்லையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சுமார் நான்கு மணிநேரம் நீடித்த இந்த பேட்டியின்போது தன்னிலை விளக்கம் அளித்த அவர், வற்புறுத்தலாகவும் பலவந்தத்தாலும் நாடு கடந்து இங்குவந்து வாழ்கிறேன் என குறிப்பிட்டார்.
Patrikai.com official YouTube Channel