திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை  நாளை (மார்ச் 14ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி; வெர்ச்சுவல் க்யூ முன்பதிவு, இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது.

மாதாந்திர பூஜைகளுக்காக, பங்குனி மாத பிறப்பையொட்டி,  பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (மார்ச் 14)  மாலை திறக்கப்பட உள்ளது. பூஜைகள் நிறைவடைந்து மார்ச் 19ஆம் தேதி இரவு நடை அடைக்கப்படும்.

தொடர்ந்து பங்குனி உத்திர திருவிழாவுக்காக மார்ச் 22ஆம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டு மறுநாள் கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக தொடங்குகிறது.

நாளை மாலை சபரிமலை தந்திரி  முன்னிலையில் மேல்சாந்தி நடையைத் திறந்து வைத்து தீபாராதனை செய்த பின்னர் கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும்.  தொடர்ந்து,   கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெறும்.

நாளை மறுதினம் மார்ச் 15  முதல் 19 வரை 5 நாட்களுக்கு, தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். இந்த நாட்களில் நடைபெறும் முக்கிய பூஜைகள்:

  • நிர்மால்ய தரிசனம்
  • கணபதி ஹோமம்
  • நெய் அபிஷேகம்
  • உஷ பூஜை
  • உச்ச பூஜை
  • தீபாராதனை
  • புஷ்பாபிஷேகம்
  • அத்தாழ பூஜை

ஆகிய பல்வேறு வழிபாடுகள் நடைபெறும்.  19 ஆம் தேதி அத்தாழ பூஜைக்குப் பிறகு, அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10:30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

[youtube-feed feed=1]