சென்னை:  பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள்  பாதி அளவில் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், ரயில் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே ரயில் பயணிகளுக்காக  இலவச பேருந்து சேவையை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளை முன்னிட்டு சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையிலான புறநகர் மின்சார ரயில் சேவையில் 45 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே  அறிவித்துள்ளது. அதன்படி,  கடந்த பிப்ரவரி 20-ம் தேதி முதல்  மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்ட 10 மற்றும் 11ம் நடைமேடை களுக்கு பதிலாக விரைவு ரயில்கள் இயக்கப்படும் 5 மற்றும் 6ம் நடைமேடைகளில் இருந்து புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் 20 அல்லது 30 நிமிடங்கள் இடைவெளியில் மட்டும் மின்சாரம் ரயில் இயக்கப்படுவதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மின்சார ரயில்களை மட்டுமே நம்பி பணிக்கு வந்து செல்லும் பல ஆயிரம் பயணிகள் கடுமையாக அவதி அடைந்துள்ளனர்.   இதன் காரணமாக போதுமான பேருந்து சேவையை அரசு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அமைச்சர் சிவசங்கர் ரயில்வேயை குற்றம் சாட்டினார். இது சலரசலப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் பயணிகளில் சிரமத்தை குறைக்க தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே ரயில் பயணிகளுக்கு இலவச பேருந்து சேவையை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. ரயில் டிக்கெட் மற்றும் ரயில் பாஸ் வைத்திருக்கும் பயணிகள் பேருந்துகளில் கட்டணமின்றி செல்லலாம்.

காலை, மாலையில் நெரிசல்மிகு நேரத்தில் 7 நிமிட இடைவெளியில் மாநகர பேருந்துகள் 20 முறை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து கிண்டி, அண்ணா சாலை, தலைமைச் செயலகம் வழியாக பேருந்து இயக்கப்படுகிறது.

[youtube-feed feed=1]